சொகுசு காராக மாறுகிறது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500... வேற லெவலில் கெத்து காட்டப் போகிறது!
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வேற லெவல் அம்சங்களுடன் சொகுசு கார்களுக்கு இணையானதாக மாறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி இருந்து வருகிறது. ஆனால், கடந்த தசாப்தத்தை போல இந்த தசாப்தம் இல்லை. இந்த தசாப்தத்தின் துவக்கத்திலேயே மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், டாடா சஃபாரி என மிகச் சிறந்த தேர்வுகளுடன் கடும் போட்டி நிறைந்ததாக மாறி இருக்கிறது.

இதனை மனதில் வைத்து, எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் மதிப்பை உயர்த்துவதற்கான முயற்சிகளில் மஹிந்திரா ஈடுபட்டுள்ளது. இதற்காக, முற்றிலும் வேறுபட்ட அம்சங்களுடன் கூடிய புதிய தலைமுறை மாடலாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 மேம்படுத்தப்பட்டுள்ளது

கடந்த ஒரு தசாப்தமாக வாடிக்கையாளர்களை வசீகரித்து வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார் இரண்டாம் தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் தற்போது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலை உள்ளது.

இந்த சூழலில், புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் இடம்பெற்றிருக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்த தகவல்கள் ஸ்பை படங்கள் மூலமாக அவ்வப்போது வெளியாகி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் Advanced Driver Assistance System (ADAS) தொழில்நுட்பம் வழங்கப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த தொழில்நுட்பம் மூலமாக ஓட்டுனரின் கண்களுக்கு புலப்படாத பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், பாதசாரிகள், விலங்குகள், தடைகள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கையை பெற முடியும்.

அதேபோன்று, ஓட்டுனர் அயர்ந்து போவதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதியும் இருக்கும். மேலும், முன்னால், பின்னால் உள்ள வாகனங்களின் வேகத்தை கணித்து, அதற்கு ஏற்பவாறு காரை கட்டுப்படுத்துவதற்கான அடாவ்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டத்தின் முக்கிய தொழில்நுட்பமாகவும் இது செயல்படும். நெடுஞ்சாலைகளில் தடம் மாறும்போது பின்னால் வரும் வாகனங்கள் குறித்த எச்சரிக்கையும் வழங்கும். முன்னால் செல்லும் வாகனத்துடன் மோதும் நிலை ஏற்பட்டால் தானியங்கி முறையில் பிரேக் பிடித்து நிறுத்தும் வசதியையும் வழங்கும்.

இதுதவிர்த்து, மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் வழங்கப்படுவது போன்று பெரிய மின்னணு திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்படுகிறது. இது காரின் மதிப்பை உயர்த்தும் மிக முக்கிய விஷயமாக இருக்கும்.

பனோரமிக் சன்ரூஃப், டைனமிக் டர்ன் இண்டிகேட்டர் விளக்குகள், அலங்கார மரத் தகடுகள் பதிக்கப்பட்ட இன்டீரியர் ஆகியவையும் மதிப்பை உயர்த்தும் விஷயங்களாக இருக்கின்றன. இந்த நிலையில், சொகுசு கார்களில் வழங்கப்படுவது போன்று சீட் மெமரி வசதியும் கொடுக்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, ஓட்டுனர் பக்கத்தில் சீட் மெமரிக்கான கட்டுப்பாட்டு சுவிட்சுகள் இருப்பது காடிவாடி தளம் வெளியிட்டிருக்கும் ஸ்பை படம் மூலமாக தெரிய வந்துள்ளது. இந்த பொத்தான்களை வைத்து ஓட்டுனர் தனது இருக்கையை தனக்கு வசதியான வகையில் அமைத்துக் கொண்டு பதிவு செய்துவிட முடியும். அடுத்த முறை வேறு யாராவது, இருக்கை அமைப்பை மாற்றி இருந்தால் கூட, குறிப்பிட்ட எண்ணை பதிவு செய்தால், அதற்கு ஏற்ப இருக்கை அமைப்பு ஓட்டுனரின் விருப்பத்திற்கு தக்கவாறு தானியங்கி முறையில் மாறிவிடும். இது நிச்சயம் கவரக்கூடிய விஷயமாக இருக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் டி-ஜிடிஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விலும் வரும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








