இப்போ தானே அறிமுகமாச்சு... அதற்குள் புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸரை வாங்கிய துபாய் போலீஸார்!!
புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 கார்கள் துபாய் நாட்டு போலீஸாரின் ரோந்து வாகன படையில் இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

டொயோட்டா நிறுவனம் அதன் புதிய லேண்ட் க்ரூஸரை சில வாரங்களுக்கு முன்பு தான் வெளியிட்டது. இந்த நிலையில் இந்த புதிய தலைமுறை டொயோட்டா கார்கள் துபாய் போலீஸாரின் ரோந்து வாகனங்களாக இணைக்கப்பட்டுள்ளன.

துபாய் போலீஸாரின் ரோந்து படையில் சொகுசு கார்களும், குற்றவாளிகளை அவர்களது வேகத்திற்கு இணையாக சென்று பிடிக்க ஸ்போர்ஸ் கார்களும் பைக்குகளுமே அதிகளவில் உள்ளன. இதனாலேயே துபாய் போலீஸார் உலகளவில் பிரபலமாக உள்ளனர்.

அதேநேரம் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் போன்ற அன்றாட பயன்பாட்டு கார்களும் உள்ளன. லேண்ட் க்ரூஸர் ஆஃப்-ரோடு எஸ்யூவி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது துபாய் போலீஸாரின் பயன்பாட்டிற்கு வந்துள்ள புதிய லேண்ட் க்ரூஸர் 300 கார்களின் முன்பக்க பொனெட்டிலும், பக்கவாட்டு பகுதிகளிலும் ‘POLICE' ஸ்டிக்கர்கள் பச்சை நிறத்தில் ஒட்டப்பட்டு இருப்பதை பார்க்கலாம்.

மாடர்ன் டிஎன்ஜிஏ-எஃப் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய லேண்ட் க்ரூஸர் 300 ஏற்கனவே கூறியதுபோல் எந்தவொரு சாலையில் இயங்கும் விதத்தில் ஆஃப்-ரோடு திறன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டிஎன்ஜிஏ-எஃப் ப்ளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டதால் புதிய லேண்ட் க்ரூஸரின் எடை கிட்டத்தட்ட 200 கிலோ வரையில் குறைந்துள்ளது.

இதுமட்டுமின்றி சிறந்த ஹேண்ட்லிங்கிற்காக ஈர்ப்புவிசை மையம் இந்த வாகனத்தில் தாழ்வாக வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன், எலக்ட்ரானிக் கைனெடிக் டைனாமிக் சஸ்பென்ஷன் சிஸ்டத்துடன் மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன், பல்வேறான ட்ரைவ் மோட்கள் மற்றும் பாதையை கண்காணிக்கும் வசதி என மெக்கானிக்கல் அம்சங்களும் புதிய லேண்ட் க்ரூஸரில் வழங்கப்பட்டுள்ளன.

பரிமாண அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், முந்தைய தலைமுறையில் இருந்து லேண்ட் க்ரூஸர் மாடல் புதிய தலைமுறையில் மிகவும் முன்னேறியுள்ளது. புதிய மாசு உமிழ்வு விதிமுறைகள் உலகம் முழுவதிலும் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், பழைய வி8 என்ஜின்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

அவற்றிற்கு மாற்றாக இரு இரட்டை-டர்போசார்ஜ்டு என்ஜின்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் ஒன்றான 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 415 பிஎஸ் மற்றும் 650 என்எம் டார்க் திறனையும், 3.3 லிட்டர் வி6 டீசல் என்ஜின் 309 பிஎஸ் மற்றும் 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

இந்த என்ஜின் உடன் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இது என்ஜினின் ஆற்றலை அனைத்து சக்கரங்களுக்கும் வழங்குகிறது. இந்திய சந்தையில் புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸர் 300 காரை நடப்பு ஆண்டின் இறுதியில் டொயோட்டா அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








