மும்பை விரைவுசாலையில் அதிவேக சோதனையில் புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500!! அறிமுகம் இந்த ஆண்டில்...
மஹிந்திராவின் புதிய தயாரிப்பான புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 கார் மும்பை- புனே விரைவு சாலையில் அதி வேகத்தில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 தாருக்கு பிறகு மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகி இருக்கும் மாடல் புதிய எக்ஸ்யூவி500 ஆகும். ஏனெனில் இதன் சோதனை ஓட்டங்கள் வெவ்வேறான இந்திய சாலைகளில் கடந்த பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வகையில் தற்போது மீண்டும் இந்த எஸ்யூவி கார் அதி வேகத்தில் சோதனை செய்யும் பொருட்டு மும்பை- புனே விரைவு சாலையில் முழு மறைப்புகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தியன் ஆட்டோஹண்டர்ஸ் என்ற யுடியூப் பக்கத்தின் மூலம் கிடைத்துள்ள இது தொடர்பான ஸ்பை படங்களில் மறைக்கப்பட்டு இருப்பினும் காரின் ஹெட்லைட்கள், டிஆர்எல்கள், புதிய அலாய் சக்கரங்கள், பழுப்பு நிற கேபின், டெயில்லைட்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு தயாரான நிலையில் இருப்பதை பார்க்க முடிகிறது.

இவற்றுடன் பின்பக்க வாஷர் & வைபர், டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட நம்பர் தட்டு மற்றும் மேற்கூரை தண்டவாளங்களையும் கார் கொண்டுள்ளது. அதேநேரம் முந்தைய ஸ்பை படஙகளின் மூலமாக பென்ஸ் கார்களுக்கு இணையான இரட்டை-திரையை டேஸ்போர்டில் இந்த கார் பெற்றுவரவுள்ளதையும் பார்த்திருந்தோம்.

இதில் பாதி திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமாகவும் மீதி பாதி திரை காரின் வேகம், கியரின் நிலை, எரிபொருள் அளவு உள்ளிட்டவற்றை காட்டும் விதத்தில் வழங்கப்படவுள்ளது. இவை மட்டுமின்றி தட்டையான- தாழ்வான ஸ்டேரிங் சக்கரம் மற்றும் வட்ட வடிவிலான க்னாப்களையும் இந்த காரில் மஹிந்திரா நிறுவனம் வழங்கவுள்ளது.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இரண்டாம் தலைமுறை எக்ஸ்யூவி500 காருக்கு இரு என்ஜின் தேர்வுகளை வழங்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதில் தற்போதைய எம்ஹாவ்க் டீசல் என்ஜினும் அடங்கும். இதனுடன் கூடுதலாக எம்ஸ்டாலியோன் பெட்ரோல் என்ஜினும் இந்த காரில் வழங்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








