கொரோனா படுத்தும்பாடு... புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் அறிமுகம் மீண்டும் ஒத்திவைப்பு!
கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமையை கருத்தில்கொண்டு புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா காரின் இந்திய அறிமுகம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்கு வந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் இரண்டாம் அலை தீயாய் பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை கருத்தில்கொண்டு புதிய ஆக்டேவியா காரின் அறிமுகத்தை ஒத்தி வைத்துள்ளதாக ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் இதனை சமூக வலைதளம் மூலமாக உறுதிப்படுத்தி உள்ளார். தற்போதைய சூழலை மனதில் வைத்து புதிய ஆக்டேவியா காரின் அறிமுகத்தை தள்ளிப் போட்டுள்ளோம். அறிமுகம் குறித்த தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம். சில சமயங்களில் முக்கிய நிகழ்வுகளை நிறுத்தி வைத்து வலுவாக திரும்ப வருவது முக்கியம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாத இறுதியில் புதிய ஆக்டேவியா காரை இந்திய சந்தைக்கு கொண்டு வர இருப்பதாக ஸாக் ஹொல்லிஸ் ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில், எதிர்பாராத அளவில் கொரோனா பரவல் தாக்கம் அதிகமாக உள்ளதையடுத்து, இந்த முடிவை ஸ்கோடா இந்தியா நிர்வாகம் எடுத்துள்ளது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் பல்வேறு புதிய தலைமுறை அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், வண்ணத்துப் பூச்சி பறப்பது போன்ற வடிவிலான க்ரில் அமைப்பு, புதிய அலாய் வீல்கள் ஆகியவற்றுடன் வர இருக்கிறது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், பிரிமீயம் சவுண்ட் சிஸ்டம், 2 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவையும் மதிப்பு சேர்க்கின்றன.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் 1.5 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் பொருத்தப்பட்டு இருக்கும். இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 190 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும். இந்த கார் செயல்திறனுடன் மிக சிறப்பான அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர வருகிறது. இனி பண்டிகை காலத்திற்கு முன்பாக இந்த கார் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








