டொயோட்டாவின் புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸர் 300!! உலகளாவிய அறிமுக தேதி அறிவிப்பு!
அடுத்த-தலைமுறை லேண்ட் க்ரூஸர் (LC) எல்சி300 காரின் உலகளாவிய அறிமுகம் குறித்த அறிவிப்பு ஒன்றினை டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய டிஎன்ஜிஏ-சார்ந்த ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய எல்சி300 மாடல் உலகளவில் வருகிற ஜூன் 9ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக டொடோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான வீடியோவினை தான் மேலே பார்க்கிறீர்கள். புதிய ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதினால், முந்தைய தலைமுறையை காட்டிலும் புதிய எல்சி300 அதிகளவில் தொழிற்நுட்ப அம்சங்களை பெற்றுவரவுள்ளது.

லேண்ட் க்ரூஸர் வாகனங்களுக்கே உண்டான பெட்டக வடிவம் அப்படியே தொடரப்பட உள்ளது. தோற்றத்தில் மாற்றங்களாக புதிய டிசைனில் ஹெட்லேம்ப்கள், முன்பக்க க்ரில் மற்றும் ஃபாக் விளக்குகளை இணைக்கும் விதத்தில் U-வடிவில் துணை துளைகள் உள்ளிட்டவை புதிய தலைமுறையில் வழங்கப்படவுள்ளன.

பக்கவாட்டில் சதுர வடிவில் சக்கர வளைவுகள் மற்றும் ஸ்போக் அலாய் சக்கரங்களை புதிய எல்சி300 பெற்றுள்ளது. இந்த 2021 டொயோட்டா மாடலில் வழங்கப்பட உள்ள என்ஜின் தேர்வுகள் குறித்த விபரங்கள் கடந்த மே மாதத்திலேயே இணையத்தில் லீக்காகி இருந்தன.

இதன்படி பார்க்கும்போது 2021 லேண்ட் க்ரூஸர் 3.3 லிட்டர் டர்போ-டீசல் மற்றும் 3.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என இரு விதமான என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட உள்ளன. இதில் புதிய டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 302 பிஎச்பி மற்றும் 700 என்எம் டார்க் திறனையும், டர்போ-பெட்ரோல் என்ஜின் 409 பிஎச்பி மற்றும் 650 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது என அந்த தகவல்களில் கூறப்பட்டுள்ளன.

முந்தைய தலைமுறை லேண்ட் க்ரூஸரில் அளவில் பெரிய 4.5 லிட்டர் இரட்டை-டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டது. இது அதிகப்பட்சமாக 261.4 பிஎச்பி மற்றும் 650 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது. புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸர் 10 விதமான நிறங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இதில் க்ளாசியர் வெள்ளை, பேர்ல் வெள்ளை மெட்டாலிக், கிளாசிக் வெள்ளை, சாடின் சில்வர் மெட்டாலிக், கிராபைட் க்ரே மெட்டாலிக், ரூபி மெட்டாலிக், கருப்பு, ஆட்டிட்யூட் கருப்பு, அவண்டே-கிரேடு அலுமினிய மெட்டாலிக் மற்றும் நிலவொளியின் மெட்டாலிக் என்பவை அடங்குகின்றன.

இவற்றை தவிர்த்து இந்த டொயோட்டா காரை பற்றிய மற்ற விபரங்கள் அதன் உலகளாவிய அறிமுகத்தின்போது வெளியிடப்பட உள்ளன. இந்த எஸ்யூவி காருக்கான முன்பதிவுகளை ஏற்க தென் ஆப்பிரிக்காவில் உள்ள டீலர்கள் ஏற்கனவே துவங்கிவிட்டனர்.

இந்தியாவில் முந்தைய தலைமுறை எல்சி200 மற்றும் லேண்ட் க்ரூஸர் ப்ராடோ கார்களை டொயோட்டா நிறுவனம் சில வருடங்களாக விற்பனை செய்தது. இதனால் புதிய எல்சி300 காரும் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் இதன் இந்திய அறிமுகத்தை தற்போதைக்கு எதிர்பார்க்க முடியாது.


Click it and Unblock the Notifications








