ஃபாஸ்டேக்கில் 'மினிமம் பேலன்ஸ்' தேவையில்லை... நிபந்தனையை கைவிட நெடுஞ்சாலை ஆணையம் முடிவு
சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான ஃபாஸ்டேக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு வைக்க வேண்டும் என்ற விதிமுறையை நீக்குவதற்கு மத்திய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்காக வரிசை கட்டும் நிலையை போக்குவதற்காக ஃபாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. ஃபாஸ்டேக் மூலமாக கட்டணம் செலுத்தும் நடைமுறை வரும் 15ந் தேதி முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.

இந்த சூழலில், சுங்கச் சாவடிகளில் நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்கான நடைமுறைகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, ஃபாஸ்டேக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

அதாவது, இப்போது ஃபாஸ்டேக் வாங்கும் வாகன உரிமையாளர்கள், குறிப்பிட்ட தொகையை காப்புக் கட்டணமாக வேண்டியது அவசியம். அத்துடன் கூடுதலாக குறைந்தபட்ச இருப்பு தொகையும் வைக்க நிபந்தனை உள்ளது.

இதில், குறைந்தபட்ச தொகையை இருப்பு வைக்கும் நிபந்தனையின் மூலமாக, சில நடைமுறை சிக்கல் உள்ளது. அதாவது, இந்த இருப்பு தொகை இருந்தும், அவசரத்திற்காக செல்லும் வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணம் கணக்கில் இருந்து செலுத்த முடியாத நிலை உள்ளது.

இதனால், சுங்கச் சாவடிகளில் வாகன நெரிசலும், ஊழியர்களுக்கு தேவையற்ற பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனை கருத்தில்கொண்டு, கார், வேன், ஜீப் வைத்திருக்கும் வாகன உரிமையாளர்களின் ஃபாஸ்டேக் கணக்கில் கூடுதலாக பிடித்து வைக்கப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கான நிபந்தனை விலக்கப்பட உள்ளது.

ஒருவேளை, கணக்கில் உரிய இருப்பு இல்லாமல் வாகனம் சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும்பட்சத்தில், அதற்குரிய தொகையை சம்பந்தப்பட்ட கணக்கு உள்ள வங்கிகள், காப்புக் கட்டணத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம்.

இதனால், இருப்பு இருக்கும் தொகையை கட்டணமாக செலுத்தும் வாய்ப்பு கிடைக்கும். இந்த புதிய தகவல் சுங்கச் சாவடிகளில் தேவையற்ற போக்குவரத்து தடங்கல்களை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








