அதிகம் விற்பனையாகும் காரின் உற்பத்தி திடீர் குறைப்பு... ஹோண்டாவை தொடர்ந்து சிக்கலில் நிஸான்... காரணம் என்ன?
நிஸான் நிறுவனம் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் ஒன்றின் உற்பத்தியை குறைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணத்தை இப்பதிவில் காணலாம்.

உலக புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா அண்மையில் குறிப்பிட்ட கார்களின் உற்பத்தியைக் கணிசமாக குறைத்தது. சில நிறுவனங்கள் தற்காலிக உற்பத்தியையே முழுமையாக நிறுத்தின. உதிரிபாகங்களின் தட்டுப்பாட்டின் காரணத்தினாலேயே இந்த நிலைக்கு ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தள்ளப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் மற்றுமொரு புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமும் அதன் குறிப்பிட்ட மாடலின் உற்பத்தியை திடீரென குறைத்திருப்பத தகவல்கள் வெளியாகியுள்ளன. நிஸான் நிறுவனத்தின் இந்த நிலைக்கும் உதிரி பாகங்களின் தட்டுப்பாடே காரணமாக அமைந்திருக்கின்றது.

தட்டுப்பாடு காரணமாக இந்நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காரான நோட் ஹைபிரிட் மாடலின் உற்பத்தியே குறைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் சிலவற்றில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் உச்சத்தைத் தொட ஆரம்பித்திருக்கின்றது. இதனால், சில நாடுகள் மீண்டும் முழு முடக்கத்திற்கு திரும்ப ஆரம்பித்திருக்கின்றன.

இதனால், காரின் உற்பத்தி ஆலைகள் மட்டுமின்றி காருக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஆலைகளும் தற்காலிக இழுத்து மூடலைச் சந்திக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையானது உலக நாடுகளில் இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களை பாதிக்கச் செய்ய ஆரம்பித்துள்ளது.

அந்தவகையிலேயே நிஸான் நிறுவனத்தின் நோட் காரின் உற்பத்தியும் பாதிப்படைந்திருக்கின்றது. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக நோட் இருக்கின்றது. இக்காரின் உற்பத்தியை நிஸான் குறைத்திருப்பதால் பெரும் பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடலாம் என யூகிக்கப்படுகின்றது.

குறிப்பாக புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் மிகப் பெரிய சிக்கலைச் சந்திக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிஸான், ஜப்பான் நாட்டில் உள்ள தனது ஒப்பாமா பிளாண்டில் வைத்தே நோட் கார்களை தயாரித்து வருகின்றது. இக்காருக்கான உதிரிபாகங்கள் சிலவற்றை உலக நாடுகளில் இருந்து பெற்றே தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.

அந்தவகையில் இந்நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து பெற்று வரும் முக்கிய கூறுகளாக சிப் மற்றும் செமி கன்டக்டர்கள் ஆகியவை இருக்கின்றன. இவற்றின் தட்டுப்பாடே உலக நாடுகளில் தலை விரித்தாட தொடங்கியிருக்கின்றது. மீண்டும் உலக நாடுகளை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைக்கத் தொடங்கியிருப்பதனாலயே இதன்மீதான தட்டுப்பாடு அதிகரித்து காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








