ஒரு வருஷம் கூட ஆகல... அதுக்குள்ள இவ்ளோ நிஸான் மேக்னைட் கார்கள் விற்பனையா? இதெல்லாம் வேற லெவல்!
நிஸான் மேக்னைட் கார் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் 30 ஆயிரமாவது மேக்னைட் காரை டெலிவரி செய்துள்ளதாக நிஸான் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நிஸான் நிறுவனத்தின் காராக மேக்னைட் உருவெடுத்துள்ளது. குறைவான விலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவில் நிஸான் மேக்னைட் தற்போது மிகவும் பிரபலமான காராக மாறியுள்ளது.

தற்போது வரை மேக்னைட் காருக்கு நிஸான் நிறுவனம் 72 ஆயிரம் முன்பதிவுகளை பெற்றுள்ளது. எனவே வரும் மாதங்களில் நிஸான் மேக்னைட் காரின் டெலிவரி பணிகள் வேகம் எடுக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஒரு ஆண்டு முடிவதற்கு உள்ளாகவே மேக்னைட் கார் இந்த சாதனைகளை படைத்துள்ளது.

நிஸான் மேக்னைட் கார் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் இந்த விற்பனைக்கு எண்ணிக்கையானது, கோவிட்-19 ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் வந்துள்ளது. எனவே இது சிறப்பான விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

கோவிட்-19 ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகள் தவிர, செமி கண்டக்டர் சிப்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும் நிஸான் நிறுவனம் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. நிஸான் மேக்னைட் ஒரு உலகளாவிய கார் ஆகும். எனினும் இந்திய சந்தைக்கு என பிரத்யேகமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.

இது நிஸான் நிறுவனத்தின் சிறிய எஸ்யூவி ரக கார் ஆகும். இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் நிஸான் மேக்னைட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. நிஸான் மேக்னைட் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் குறைந்தபட்சம் 2 ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. அதாவது இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டில் கூட 2 ஏர்பேக் வழங்கப்படுகிறது.

இதுதவிர நிஸான் மேக்னைட் காரில், இஎஸ்பி, டிராக்ஸன் கண்ட்ரோல், ஏபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் நிஸான் மேக்னைட் காரில், 360 டிகிரி கேமரா சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்பட மேலும் பல்வேறு வசதிகளையும் நிஸான் மேக்னைட் கார் பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ரெனால்ட் கைகர், டொயோட்டா அர்பன் க்ரூஸர் உள்ளிட்ட சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுடன் நிஸான் மேக்னைட் போட்டியிட்டு வருகிறது. இது மிகவும் சவால் நிறைந்த செக்மெண்ட் ஆகும்.

தற்போதைய நிலையில் இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்ப கூடிய செக்மெண்ட்டாக சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் திகழ்கிறது. ஓரளவிற்கு குறைவான விலையில் எஸ்யூவி ரக கார்களை வாங்க முடியும் என்பதுதான் இதற்கு காரணம். வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வழங்கி வருவதால், இந்த செக்மெண்ட்டில் பல்வேறு புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகமாகி வருகின்றன.

சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டை போலவே, மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட் கார்களுக்கும் வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வழங்கி வருகின்றனர். இந்த செக்மெண்ட்டில் எம்ஜி அஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகுன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய 3 கார்கள் புதிதாக களத்தில் இறங்கியுள்ளன. ஏற்கனவே ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகிய கார்கள் இந்த செக்மெண்ட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

ஃபுல் சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டை பொறுத்தவரை, ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய வெளியேற்றத்தால், எண்டேவியர் போட்டியில் இருந்து விலகியுள்ளது. இது டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்ஜி க்ளோஸ்ட்டர் ஆகிய கார்களுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. ஃபோர்டு எண்டேவியர் போட்டியில் இல்லாத காரணத்தால், வரும் மாதங்களில் டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் எம்ஜி க்ளோஸ்ட்டர் ஆகிய 2 எஸ்யூவி கார்களின் விற்பனையும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.


Click it and Unblock the Notifications








