2030க்குள் 15 புதிய எலக்ட்ரிக் கார்கள்... ட்ரில்லியன் கோடிகளில் முதலீடுகள்... நிஸானின் எதிர்கால திட்டங்கள்!!
ஜப்பானை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிஸான் அடுத்த பத்து ஆண்டிற்குள் அறிமுகப்படுத்தவுள்ள 15 புதிய எலக்ட்ரிக் கார்களின் கான்செப்ட்களை வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

எலக்ட்ரிக் இயக்கத்தை நோக்கிய நிஸான் குறிக்கோள் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கப்பட உள்ளன. 2028ஆம் ஆண்டிற்குள் தனது எலக்ட்ரிக் வாகனங்களில் பொருத்துவதற்கு சொந்தமான பேட்டரிகளை உருவாக்க வேண்டும் என்பதும் நிஸானின் இந்த திட்டங்களில் அடங்குகின்றது.

இதற்காக 2024ஆம் ஆண்டில் ஜப்பான் நகரமான யோகோஹாமா-வில் பைலட் தொழிற்சாலை எனப்படும் தொழிற்நுட்பங்களை கண்டறியும் மையத்தினை புதியதாக நிஸான் நிறுவவுள்ளது. நிறுவனத்தின் புதிய குறிக்கோள் 2030 திட்டம் குறித்து நிஸான் சிஇஓ மகோடோ உச்சிடா பேசுகையில், சமூக தேவைகளை நிவர்த்தி செய்வதில் நிறுவனங்களின் பங்கு அதிகரித்து வருகிறது.

நிஸான் குறிக்கோள் 2030 உடன் கார்பன் மாசுவை குறைப்பத்கற்கும், புதிய வணிக வாய்ப்புகளை பெறுவதற்கும் புதிய தலைமுறை மின்மயமாக்கலையும், அதிநவீன தொழிற்நுட்பங்களையும் கொண்டுவரவுள்ளோம். வாடிக்கையாளர்களுக்கும் சமூகத்திற்கும் உண்மையிலேயே தேவைப்படும் ஒரு நிலையான நிறுவனமாக நிஸானை மாற்ற விரும்புகிறோம் என்றார்.

உலகிலேயே எலக்ட்ரிக் பயணிகள் காரை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனங்களுள் நிஸானும் ஒன்றாகும். இதன் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் காரான லீஃப் 2010இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2020இல் டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காரின் ஆதிக்கம் உலக நாடுகளில் அதிகரிக்க துவங்கியவதற்கு முன்பு வரையில் நிஸான் லீஃப் உலகின் மிக சிறப்பாக விற்பனையாகும் எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக விளங்கியது.

2030க்குள் நிஸான் அறிமுகப்படுத்தவுள்ள 23 மின்மயமாக்கப்பட்ட வாகனங்களில் 15 முழு எலக்ட்ரிக் கார்கள் அடங்குகின்றன. இவற்றின் மூலம் 2030இல் உலகளவில் நிஸான் விற்பனை செய்யும் வாகனங்களில் பாதி இவி-களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2050க்குள் மொத்த வாகனங்களையும் முழு-எலக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற வேண்டும் என்பது நிஸானின் நோக்கமாக உள்ளது.

எதிர்கால திட்டங்கள் குறித்து நிஸான் சிஓஓ அஷ்வானி குப்தா கருத்து தெரிவிக்கையில், எங்களது நீண்ட கால தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்பு வரலாறு மற்றும் இவி புரட்சியை ஏற்படுத்துவதில் எங்களது பங்கு குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்களின் புதிய இலட்சியத்துடன், உற்சாகத்தை ஊக்குவித்தல், தத்தெடுப்பை செயல்படுத்துதல் மற்றும் தூய்மையான உலகத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து இவி-களுக்கான இயற்கையான மாற்றத்தை விரைவுப்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறோம் என்றார்.

குறிக்கோள் 2030 திட்டத்தின் மூலம் இவி-களுக்கான வரம்பை விரிவுப்படுத்தும் நிஸான் நிறுவனம் அடுத்த 5 வருடங்களில் சுமார் 2 லட்ச கோடி யென்களை (ஏறக்குறைய 1.32 லட்ச கோடி ரூபாய்) முதலீடு செய்யவுள்ளது. அதேநேரம் 2026க்குள் சார்ஜிங் கட்டமைப்புகளை உருவாக்க 20 பில்லியன் யென்களை (13,219 கோடி ரூபாய்) முதலீடு செய்யவும் நிஸான் திட்டமிட்டுள்ளது.

அத்துடன், உலகளவிலான பேட்டரி தயாரிப்பு திறனையும் அதிகப்படுத்தவுள்ளதாக நிஸான் அறிவித்துள்ளது. இதற்காக கூட்டணி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிவரும் இந்த ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் 2026க்குள் பேட்டரிகளின் திறனில் 52GWh-ஐயும், 2030க்குள் 130GWh-ஐயும் அடைய திட்டம் தீட்டி வருகிறது. ஏற்கனவே கூறியதுதான், 2028க்கு பிறகு வெளிவரும் நிஸான் இவி-களில் நிஸானின் சொந்த திட நிலை பேட்டரிகள் பொருத்தப்படவுள்ளன.

நிஸான் உருவாக்கும் பேட்டரி தொகுப்புகளின் விலைகள் 2028இல் kWh-க்கு 75 அமெரிக்கன் டாலர்களாக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் எதிர்காலத்தில் இந்த விலை மேலும் குறைக்கப்பட்டு kWh-க்கு 65 டாலர்கள் என நிர்ணயிக்கப்படலாம். ஜப்பானிற்கு வெளியே ஐரோப்பாவில் சில பகுதிகளில் பேட்டரி புதுப்பிக்கும் தொழிற்சாலைகளை அடுத்த 2022இல் இந்த நிறுவனம் நிறுவவுள்ளது. அதனை தொடந்து அமெரிக்க சந்தையில் 2025ஆம் நிதியாண்டில் நிறுவப்படலாம்.

2030க்குள் புதிய 15 எலக்ட்ரிக் வாகனங்களின் மூலம் குறிக்கோள் 2030 திட்டமானது நிஸானின் மின்மயமாக்கலை அதிவேகமாக மேம்படுத்தவுள்ளது. வாகன துறை இவி-களை நோக்கி எவ்வளவு விரைவாக மாறுகிறது என்பதை நிஸானின் திட்டங்கள் காட்டுகின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த ஜப்பானிய நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை குறைவான விலையில் எதிர்பார்க்கலாம் என்பதற்கும் நம்பிக்கை அளிக்கின்றன.


Click it and Unblock the Notifications








