ஃபாஸ்டேக் காலக்கெடு மேலும் நீடிக்கப்படுமா?- அமைச்சர் நிதின் கட்காரி பதில்!
ஃபாஸ்டேக் காலக்கெடு மேலும் நீடிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி புதிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் முறை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வாகன ஓட்டிகளின் நலன் கருதி, இறுதி வாய்ப்பாக வரும் பிப்ரவரி 15ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஃபாஸ்டேக் முறையில் பணம் வசூலிக்கும் முறைக்கு மேலும் காலக்கெடு நீடிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புடன் பல வாகன ஓட்டிகள் இதுவரை ஃபாஸ்டேக் அட்டை வாங்காமல் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்படுவது குறித்து எம்.பி.,க்கள் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி பதில் அளித்துள்ளார்.

அதில், நாடுமுழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் நடைமுறை 100 சதவீதம் அமல்படுத்தப்பட உள்ளது. காலக்கெடு மேலும் நீடிக்கப்படாது. சுங்கக் கட்டணம் ஃபாஸ்டேக் முறையில் மட்டுமே வசூலிக்கப்படும்.

கடந்த டிசம்பர் மாதம் மொத்த சுங்கக் கட்டண வசூலில், 73.36 சதவீதம் அளவுக்கு ஃபாஸ்டேக் முறையில் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.2,088.26 கோடி ஃபாஸ்டேக் மூலமாக சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

கடந்த மாதம் 12ந் தேதி வரை தமிழகத்தில் மொத்தம் 18,64,115 ஃபாஸ்டேக் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சுங்கச் சாவடிகளில் நூறு சதவீதம் அளவுக்கு ஃபாஸ்டேக் கட்டாயமாகும்போது, சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் வரிசைகளை கடக்கும் வாகனங்களுக்கு காத்திருப்பு நேரம் என்பது வெகுவாக குறையும்," என்று தெரிவித்துள்ளார்.

சுங்கச் சாவடிகளில் ஏற்படும் வாகனத் தேக்கத்தை தவிர்த்து, விரைவாக வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக மின்னணு முறையில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கான ஃபாஸ்டேக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களில் விண்ட்ஷீல்டு எனப்படும் முன்புற கண்ணாடியில் பொருத்தப்படும் ஃபாஸ்டேக் ஸ்டிக்கரில் குறிப்பிட்ட குறியீடுகளை வைத்து சுங்கச் சாவடிகளில் உள்ள சென்சார்கள் மூலமாக வாகனத்தின் அடையாளம் கண்டறியப்படும்.

மேலும், வாகனத்திற்கான நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கான உரிய கட்டணம் ஃபாஸ்டேக் கணக்கில் இருந்து சம்பந்தப்பட்ட சுங்கச் சாவடி நிறுவனத்திற்கு கட்டணம் பரிமாற்றப்பட்டு விடும். இந்த முறை மூலமாக, சுங்கச் சாவடிகளில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நேரம் தவிர்க்கப்படுவதுடன், எரிபொருள் விரயம், மாசு உமிழ்வு பிரச்னையும் குறைக்க வழிவகுக்கும்.
Via- TOI


Click it and Unblock the Notifications








