இனி சேல்ஸ் பட்டைய கௌப்ப போகுது... எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சூப்பரான சலுகை... என்னனு தெரியுமா?
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிரடியான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக பல்வேறு முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதியையும், காற்று மாசுபாடு பிரச்னையையும் குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதற்கு ஒரு தடைக்கல்லாக பார்க்கப்படுகிறது.

எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த வரிசையில் ஒடிசா மாநில அரசும் தற்போது இணைந்துள்ளது. ஒடிசா மாநில அரசு தனது எலெக்ட்ரிக் வாகன கொள்கை 2021-ஐ கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டது. ஒடிசா மாநிலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதுதான் இதன் நோக்கம்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த எலெக்ட்ரிக் வாகன கொள்கை அமலில் இருக்கும். அதாவது வரும் 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை இந்த கொள்கை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியம் மிகவும் முக்கியமானது. இதன்படி எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு அடிப்படை விலையில் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படவுள்ளது. அதே நேரத்தில் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.

அதே சமயம் எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது மற்றொரு அதிரடியான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மோட்டார் வாகன வரிகள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் விலக்கு வழங்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு.

ஒடிசா மாநில போக்குவரத்து துறை இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. வரிகள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து 100 சதவீத விலக்கு என்பது அனைத்து வகையான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக வாகனங்களின் எக்ஸ் ஷோரூம் விலையை விட ஆன் ரோடு விலை அதிகமாக இருக்கும். இதற்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணம் ஆகியவையே காரணம் ஆகும். ஆனால் ஒடிசா மாநிலத்தில் இனி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்கள் சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களை செலுத்த வேண்டியதில்லை.

அத்துடன் மானியமும் வேறு வழங்கப்படுகிறது. எனவே குறைவான செலவிலேயே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடியும். இந்த நடவடிக்கை மூலம், பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து பொதுமக்களின் கவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திரும்பும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதன் விளைவாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால், பொதுமக்கள் பலரும் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு திட்டமிட்டு வருகின்றனர். அவர்களுக்கு இந்த சலுகை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசா மட்டுமல்லாது இன்னும் பல்வேறு மாநில அரசுகளும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இவ்வாறு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்று மாசுபட்டு கொண்டே வருவதாலும், கச்சா எண்ணெய்க்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதாலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறியாக வேண்டிய தேவை உலகிற்கு உள்ளது.

எனவே கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளின் அரசுகளும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளன. மக்களுக்கு முன் உதாரணமாக அரசு அதிகாரிகளும், எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, சிஎன்ஜி மற்றும் எத்தனால் போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாடும் தற்போது ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசலுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜியின் விலை குறைவாக இருப்பதால் இந்தியாவில் தற்போது சிஎன்ஜி வாகனங்களின் விற்பனையும் உயர்ந்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








