டீசல் போட்டு கட்டுபடி ஆகல... இனி ஏசி வசதியுடன் எலெக்ட்ரிக் பஸ்களை மட்டுமே வாங்குவோம்... அவுரே சொல்லீட்டாரு!
இனி எலெக்ட்ரிக் பேருந்துகளை மட்டுமே வாங்குவோம் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் ஏசி பேருந்துகளை மட்டுமே கொள்முதல் செய்வோம் என பெஸ்ட் (BEST- Brihanmumbai Electric Supply and Transport) நிர்வாகம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. பெஸ்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

2022ம் ஆண்டின் இறுதிக்குள் பெஸ்ட் நிறுவனத்தின் பேருந்துகளில் 45 சதவீத பேருந்துகள் எலெக்ட்ரிக் பேருந்துகளாக மாற்றப்பட்டு விடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக பெஸ்ட் நிறுவனத்திற்கு சொந்தமான 250 டீசல் பேருந்துகள், சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையிலும் மாற்றப்படவுள்ளன.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பெஸ்ட் நிறுவனத்தின் பொது மேலாளர் லோகேஷ் சந்திரா கூறுகையில், ''இது மிகப்பெரிய முடிவு. நாங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வாகனங்களுக்கு மாறி கொண்டுள்ளோம்.

இந்த பேருந்துகள் அதிக சத்தம் எழுப்பாது என்பதும் பயணிகளுக்கு கிடைக்கும் நன்மையாகும்'' என்றார். பெஸ்ட் நிறுவனம் வெகு சமீபத்தில் விசாலமான இடவசதி கொண்ட 31 எலெக்ட்ரிக் பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டுள்ளது. இவை 12 மீட்டர் நீளம் கொண்டவை ஆகும். இதன் மூலம் பெஸ்ட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பேருந்துகளின் எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து லோகேஷ் சந்திரா மேலும் கூறுகையில், ''இன்னும் அதிகமாக எலெக்ட்ரிக் பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம். நடப்பாண்டு டிசம்பருக்குள் எலெக்ட்ரிக் பேருந்துகளின் எண்ணிக்கையை 411 ஆக உயர்த்துவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

அத்துடன் 2022ம் ஆண்டு கூடுதலாக 1,800 எலெக்ட்ரிக் பேருந்துகளை வாங்கவுள்ளோம். இதன் மூலம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் எங்கள் எலெக்ட்ரிக் பேருந்துகளின் எண்ணிக்கை 2,211 ஆக உயரும்'' என்றார். 2022ம் ஆண்டின் இறுதியில் பெஸ்ட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 4,900 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், 2,211 பேருந்துகள் எலெக்ட்ரிக் பேருந்துகள் என்னும்போது, அந்த சமயத்தில் பெஸ்ட் நிறுவனத்தின் பேருந்துகளில், 45 சதவீத பேருந்துகள் எலெக்ட்ரிக் பேருந்துகளாக இருக்கும். பெஸ்ட் நிறுவனத்தின் இந்த முயற்சி உண்மையிலேயே சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான மிக சிறப்பான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை.

இதன் மூலம் மும்பையில் காற்றின் தரம் மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மும்பையில் டீசல் மூலம் இயங்கும் பேருந்துகளும் காற்று மாசுபாடு பிரச்னைக்கு மிக முக்கியமான காரணமாக இருந்து வருகின்றன. எனவே மும்பை மட்டுமல்லாது, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் எலெக்ட்ரிக் பேருந்துகளை அதிகளவில் இயக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கூட சமீபத்தில் சிஎன்ஜி பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பது இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயமாகும். டீசல் மூலம் பேருந்துகளை இயக்குவதற்கு ஆகும் செலவை விட, எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி மூலம் இயக்குவதற்கு குறைந்த செலவே ஆகும் என்பதும் கூடுதல் சிறப்பம்சம்.

இந்தியாவில் தற்போது டீசல் விலை வேறு உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே டீசல் பேருந்துகளை படிப்படியாக ஒதுக்கி விட்டு, எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி பேருந்துகளை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், போக்குவரத்து கழகங்கள் அதிக லாபம் ஈட்டவும் முடியும். இயக்குவதற்கு குறைந்த செலவே ஆகும் என்பதால்தான், பொதுமக்களும் எலெக்ட்ரிக், சிஎன்ஜி வாகனங்களுக்கு மாற அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒன்றிய அரசின் ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் மூலமும், மாநில அரசுகளின் எலெக்ட்ரிக் வாகன கொள்கையின் மூலமும் மானியம் உள்பட பல்வேறு சலுகைகளும் கிடைக்கின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீது இருந்த மக்களின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் மீது திரும்பி வருவதற்கு இவையும் முக்கியமான காரணங்களாக உள்ளன.


Click it and Unblock the Notifications








