இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த கார்... டாடா நெக்ஸானை வாங்க தவம் கிடக்கும் வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?
டாடா நெக்ஸான் கார் விற்பனையில் புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 28,017 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாடா மோட்டார்ஸ் நிறுவன கார் என்ற பெருமையை நெக்ஸான் பெற்றுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 10,006 நெக்ஸான் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையாகும். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் 5,179 டாடா நெக்ஸான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.

இது 93.20 சதவீத வளர்ச்சியாகும். ஆனால் நடப்பாண்டு ஜூலை மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 10,287 நெக்ஸான் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்தது. அதன்பின் வந்த ஆகஸ்ட் மாதம் டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை 10,006 ஆக குறைந்துள்ளது. இந்த வகையில் பார்த்தால் இது 2.73 சதவீத வீழ்ச்சியாகும்.

ஆனால் இது மிக சிறிய வீழ்ச்சிதான் என்பதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெரிதாக கவலை கொள்ள தேவையில்லை. டாடா நெக்ஸான் கார் இந்திய சந்தையில் இந்த அளவிற்கு மிகவும் பிரபலமாக இருந்து வருவதற்கு அதன் பாதுகாப்பு அம்சங்கள்தான் மிகவும் முக்கியமான காரணம் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் இல்லை.

டாடா நெக்ஸான் காரில், ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், சைல்டு சேஃப்டி லாக்ஸ், டிராக்ஸன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரோல்ஓவர் மிட்டிகேஷன், ஹில் அஸிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் மிகவும் சிறப்பான கட்டுமான தரத்தையும் டாடா நெக்ஸான் பெற்றுள்ளது.

குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை ஸ்கோர் செய்த முதல் மேட் இன் இந்தியா கார் என்ற வரலாற்று சிறப்புமிக்க பெருமை டாடா நெக்ஸான் காரைதான் சேரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் டாடா நெக்ஸான் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

அதே சமயம் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் டாடா நெக்ஸான் 3 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதன் காரணமாகதான் டாடா நெக்ஸான் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த அளவிற்கு மிகவும் பிரபலமாக உள்ளது. வரும் காலங்களில் டாடா நெக்ஸான் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் இன்னும் அதிக வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

பாதுகாப்பு வசதிகளில் மட்டுமல்லாது, மற்ற வசதிகளிலும் டாடா நெக்ஸான் தலைசிறந்த தயாரிப்புகளில் ஒன்றாக உள்ளது. இந்த காரில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் உடன் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஐரா கனெக்டட் கார் தொழில்நுட்பம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

மேலும் க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட் கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், கூல்டு க்ளவ் பாக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளையும் டாடா நெக்ஸான் பெற்றுள்ளது. அத்துடன் டாடா நெக்ஸான் காரில், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

மேலும் நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இன்றைய தேதியில் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்றால், அது டாடா நெக்ஸான்தான் என்பது குறிப்பிடத்தக்கது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு தற்போது நேரடி போட்டி என எந்த மாடலும் இல்லை.

அதே சமயம் ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட டாடா நெக்ஸான் கார் இந்திய சந்தையில், ஹூண்டாய் வெனியூ, மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, கியா சொனெட், டொயோட்டா அர்பன் க்ரூஸர், நிஸான் மேக்னைட், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் ரெனால்ட் கைகர் உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








