தேர்தல் வந்தால்தான் இந்த அதிசயம் எல்லாம் நடக்கும்!
தேர்தல் வந்தால் மக்கள் எதிர்பார்க்காத சில நல்ல விஷயங்கள் தற்காலிகமாக நடக்கும். அந்த வகையில், 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒரு மேஜிக் நடந்து வருகிறது.

கொரோனாவுக்கு பிறகு வாகனப் போக்குவரத்து முழு வீச்சில் துவங்கியதில் இருந்து, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்தது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்தது மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், 'ஸ்லோ பாய்சன்' போன்று தினசரி சிறிய அளவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.21.58 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.19.18 வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு விதங்களில் அதிக சுமையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, டீசல் விலை உயர்வால் சரக்குப் போக்குவரத்து செலவீன அதிகரிப்பதால், அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

ஒபேக் அமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்ததும், கொரோனாவால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சரிகட்டும் விதமாக, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலை உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் காரணங்களை அடுக்கின.

இந்த நிலையில், 5 மாநிலங்ளுக்கான சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் வைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் 27ந் தேதிக்கு பிறகு, பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்து வந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விவலையில் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில், கடந்த ஆண்டு மார்ச் 16ந் தேதிக்கு பின்னர், முதல்முறையாக பெட்ரோல், டீசல் விலை மிக சொற்ப அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது, பெட்ரோல் லிட்டருக்கு 18 காசுகளும், டீசல் லிட்டருக்கு 17 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஓர் ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக பெட்ரோல், டீசல் விலை சிறிதளவு குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 24 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை முதல் முறையாக குறைக்கப்பட்டுள்ளது என்பதே மகிழ்ச்சியான விஷயம்தான்.

ஆனால், 5 மாநில சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு பல கட்டங்களாக வரும் ஏப்ரல் 29ந் தேதி வரை நடைபெற உள்ளது. அதுவரை பெட்ரோல், டீசல் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. ஏப்ரல் மாத இறுதியில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








