Piaggio-வின் மின் வாகனங்களுக்கான அனுபவ மையம்... இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் திறப்பு!
பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான பியாஜியோ (Piaggio) மின் வாகனங்களுக்கான அனுபவ மையத்தை சென்னையில் திறந்துள்ளது. நிறுவனம் இந்தியாவில் இதுமாதிரியான மையத்தை திறப்பது இதுவே முதல் முறையாகும்.

எதிர்காலத்தில் மின்சார வாகனங்களே ஒட்டுமொத்த சாலையையும் ஆளுகை செய்ய இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த காலங்களைக் காட்டிலும் மிக அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து, வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் மக்களைக் கவருகின்ற வகையிலான பணிகளை மேற்கொண்டு இருக்கின்றன.

அந்தவகையில், பிரபல பியாஜியோ நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் மக்களைக் கவரும் வகையில் ஓர் தரமான சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது. நிறுவனம், தனது முதல் மின்சார வாகன ரிவியூ மையத்தை சென்னையில் திறந்து வைத்திருக்கின்றது. ரியோ ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் வாயிலாக இந்த மையத்தை நிறுவனம் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றது.

இந்த மையத்தின் வாயிலாக பியாஜியோவின் அனைத்து மின் வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. அங்கு மின் வாகனங்களை பார்வையிடுதல், அதுகுறித்த தகவலைக் கேட்டறிதல் மற்றும் வாங்கிக் கொள்ளவும் முடியும். கார்கோ மற்றும் பயணிகள் வாகனங்கள் என அனைத்தும் இங்கு கிடைக்கும்.

பியாஜியோ நிறுவனம் மிக சமீபத்தில் அபே இ-எக்ஸ்ட்ரா (E-Xtra FX) எனும் அதிக திறன் வாய்ந்த கார்கோ வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது ஓர் 9.5 Kw பவரை வெளியேற்றும் திறன் கொண்ட இ-கார்கோ வாகனம் ஆகும். வாகனத்தின் உறுதித் தன்மைக்காக இதன் உடல் பாகம் முழுவதும் உலோகத்தால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது ஆறடி நீளம் கொண்ட பாடி ஆகும். அதிகளவில் லோடு மற்றும் சரக்குகளை ஏற்றி செல்லும் வகையில் இப்பெரிய உருவம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாகனத்தை டெலிவரி வேன் அல்லது சரக்குகளை ஏற்றி செல்லும் வேன் அல்லது கழிவுகளை அகற்றும் வாகனம் என பல தரப்பட்ட நிலையில் பயன்டுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், அதிக லாபத்தை ஈட்டக் கூடிய ஓர் வாகனமாக இந்த அபே இ-சிட்டி எஃப்எக்ஸ் காட்சியளிக்கின்றது.

மேலும், இதில் பன்முக சிறப்பு வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமாதிரியான வாகனங்களுக்காகவே சென்னையில் தனது முதல் மின்சார வாகன அனுபவ மையத்தை பியாஜியோ நிறுவனம் திறந்து வைத்திருக்கின்றது.

இந்த சிறப்புமிக்க மையத்தை தமிழ்நாடு மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் பியாஜியோ நிறுவனம் அதன் முதல் மின் வாகன அனுபவ மையத்தை திறந்து வைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. எதிர்காலத்தில் அதிக முக்கியத்துவத்தை மின் வாகனங்கள் பெற இருக்கின்றன" என்றார்.

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் மின் வாகன உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கான மின் வாகன கொள்கையை அரசு மிக விரைவில் வெளியிட இருப்பதாக தெரிவித்தார். ஆகையால், குஜராத், கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கிடைப்பதைப் போல தமிழகத்திலும் மானியம் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மின் வாகனங்களின் பக்கம் மக்களைக் கவரும் விதமாக மானியம் குறித்த அறிவிப்பை அண்மையில் ஹர்யானா மாநில அரசு அறிவித்திருந்தது. மாநிலத்தின் முதலமைச்சர் மனோஹர் லால் கத்தர், வேர்ல்டு கார் ஃப்ரீ டே (World Car Free Day) தினத்தன்று இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதேபோன்று ஒவ்வொரு மாநில அரசும் தங்களின் மாநில மக்களை மின் வாகனங்களின் பக்கம் ஈர்க்கும் விதமாக மானியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகின்றன. இதேபோல், சில தனியார் நிறுவனங்கள் மின் வாகனங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் பணியில் களமிறங்கியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








