குட் நியூஸ்... முதல்முறையாக லீமான்ஸ் பந்தயத்தில் பங்கேற்கும் இந்திய அணி!
உலகின் மிகவும் சவாலானதாகவும், பாரம்பரியம் மிக்கதாகவும் கருதப்படும் 24 ஹவர்ஸ் லீமான்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்கும் வாய்ப்பை முதல்முறையாக இந்திய அணி பெற்று இருக்கிறது. இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் வரலாற்றில் இந்த விஷயம் மிகவும் முக்கிய விஷயமாக பதிவாக உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் 24 ஹவர்ஸ் லீமான்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்பது உலக அளவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் பந்தய வீரர்களின் கனவு விஷயமாக இருந்து வருகிறது. ரேஸ் டிராக்கில் மிக நீண்ட நேரம் ஓட்ட வேண்டிய விதிகள் கொண்ட இந்த பந்தயத்தில் வீரர்களும், கார்களும் எந்த அளவுக்கு தாக்குபிடிக்கின்றன என்பதை அறிந்து கொள்ளும் விதமாக இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த பந்தயத்தில் ஏற்கனவே இந்திய வீரர்கள் வெளிநாட்டு அணிகளின் சார்பில் பங்கேற்றுள்ளனர்.
ஆனால், இந்திய அணி நேரடியாக பங்கு கொண்டதில்லை. இந்த சூழலில், முதல்முறையாக லீமான்ஸ் கார் பந்தயத்தில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்ட ரேஸிங் டீம் இந்தியா அணிதான் லீமான்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ளது.

இந்த ஆண்டுக்கான லீமான்ஸ் கார் பந்தயம் வரும் ஜூன் மாதத்தில் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா பிரச்னை மீண்டும் தலைதூக்கி உள்ளதால், வரும் ஆகஸ்ட் மாதம் 21 மற்றும் 22ந் தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில்தான் முதல்முறையாக ரேஸிங் டீம் இந்தியா அணி பங்கேற்க உள்ளது.
இந்தியாவின் முதல் ஃபார்முலா-1 கார் பந்தய வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான நரேன் கார்த்திகேயன், அர்ஜுன் மெய்னி மற்றும் நவீன் ராவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். வேர்ல்டு என்டியூரன்ஸ் சாம்பியன்ஷிப் பந்தயங்களின் மூலமாக புகழ்பெற்ற யுரேஷியா மோட்டார்ஸ்போர்ட் குழுவினருடன் இணைந்து தொழில்நுட்ப உதவிகளை பெறுவதற்கான ரேஸிங் டீம் இந்தியா கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளது.

கடந்த மாதம் நடந்த ஆசிய லீமான்ஸ் கார் பந்தயத்தில் ஒரேகா-07 காரை ரேஸிங் டீம் இந்தியா குழுவினர் பயன்படுத்தினர். இந்த நிலையில், லீமான்ஸ் கார் பந்தயத்தில் லிஜியர் ஜேஎஸ் பி217 எல்எம்பி-2 காரை பயன்படுத்த உள்ளனர். இந்த காரில் இருக்கும் 4.2 லிட்டர் கிப்ஸன் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் 608 எச்பி பவரை வழங்கும்.
கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்த ஆசிய லீமான்ஸ் கார் பந்தயத்தில் ரேஸிங் டீம் இந்தியா பங்கேற்று 5வது இடத்தை பிடித்தது. இந்த சூழலில், சிறப்பு நுழைவு மூலமாக இந்த ஆண்டுக்கான லீமான்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்கும் அரிய வாய்ப்பை ரேஸிங் டீம் இந்தியா பெற்றிருக்கிறது. இது இந்திய தேசத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்று நரேன் கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்பான்சர், குழுவினர், தொழில்நுட்ப உதவி வழங்குவோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








