ஆசிய லீமான்ஸ் கார் பந்தயத்தில் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கும் முதல் இந்திய அணி!
வரும் 13 மற்றும் 14 துபாயில் நடைபெற இருக்கும் ஆசிய லீமான்ஸ் கார் பந்தயத்தின் முதல் சுற்றுப் போட்டிகளில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் அடங்கிய முதல் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இது இந்திய மோட்டார் பந்தய பிரியர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் லீமான்ஸ் 24 ஹவர்ஸ் கார் பந்தயம் நீண்ட பாரம்பரியமும், அதிக சவால்களை கொண்ட பந்தயமாக கருதப்படுகிறது. வீரர்கள் மற்றும் வாகனங்களின் திறன் எவ்வளவு நேரம் தாக்குபிடிக்கும் என்பதை கண்டறியும் வகையில் இந்த பந்தயம் மிகவும் சவாலாக அமைந்து வருகிறது. 1923ம் ஆண்டு முதல் இந்த பந்தயம் நடைபெற்று வருகிறது. 18 ஃபார்முலா-1 பந்தயங்களுக்கு இணையானதாக ஒரு லீமான்ஸ் 24 ஹவர்ஸ் பந்தயம் அமைந்துள்ளது.
இந்த நிலையில், இந்த போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிகளில் ஒன்றாக, ஒவ்வொரு கண்டத்திலும் பிராந்திய அளவில் நடத்தப்படும் லீமான்ஸ் பந்தயங்களில் வெற்றி பெறுவதும் ஒரு தகுதியாக வைத்து அழைப்பு விடுக்கப்படும். அதன்படி, துபாயில் நடைபெற இருக்கும் ஆசிய லீமான்ஸ் கார் பந்தயத்தில் முழுக்க முழுக்க இந்திய வீரர்கள் கொண்ட களம் காண இருக்கிறது.
ரேஸிங் டீம் இந்தியா என்ற பெயரில் இந்திய தேசத்தின் சார்பில் பங்கேற்க இருக்கும் இந்த அணியில் இந்தியாவின் நட்சத்திர கார் பந்தய வீரர்கள் தமிழகத்தை சேர்ந்த நரேன் கார்த்திகேயன், பெங்களூரை சேர்ந்த அர்ஜுன் மெய்னி மற்றும் அமெரிக்க வாழ் இந்தியரான நவீன் ராவ் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
ஆசிய லீமான்ஸ் சீரிஸ் கார் பந்தயத்தில் LMP2 என்ற பிரிவில் ரேஸிங் டீம் இந்தியா அணி சார்பில் இவர்கள் பங்கேற்க உள்ளனர். ரேஸிங் டீம் இந்தியா சார்பில் ஒரேகா 07 என்ற பந்தய காரை பயன்படுத்த உள்ளனர். இந்த காரில் 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 320 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய லீமான்ஸ் பந்தயம் 4 போட்டிகளை கொண்டதாக நடத்தப்படும். ஒவ்வொரு போட்டியும் 4 மணிநேரம் ஓட்டுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். வரும் 13 மற்றும் 14ந் தேதி துபாயில் இரண்டு போட்டிகளும், அடுத்த வாரம் 19 மற்றும் 20 தேதிகளில் அபுதாபியில் உள்ள யாஸ் மரினா பந்தய களத்தில் அடுத்த இரண்டு போட்டிகளும் நடத்தப்படும்.
ஆசிய லீமான்ஸ் போட்டியில் ரேஸிங் டீம் இந்தியா அணி வெற்றி பெற்றால், வரும் ஜூன் மாதம் பிரான்ஸ் நாட்டின் நடைபெற இருக்கும் லீமான்ஸ் 24 ஹவர்ஸ் கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பை பெற முடியும். மேலும், லீமான்ஸ் 24 ஹவர்ஸ் பந்தயத்தில் இந்தியாவில் சார்பில் பங்கேற்கும் முதல் அணியாகவும் அமையும். எனவே, இந்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் ரேஸிங் டீம் இந்தியா அணி வீரர்களும், குழுவினரும் செயல்பட்டு வருகின்றனர். ரேஸிங் டீம் இந்தியா அணிக்கு ஜேகே டயர்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்ய இருக்கிறது.

இந்த போட்டியில் பங்கேற்பது குறித்து நரேன் கார்த்திகேயன் கூறுகையில்,"முழுக்க முழுக்க இந்திய வீரர்களுடன் கூடிய இந்த குழுவில் இணைந்து செயல்பட இருக்கும் இந்த தருணம் எனக்கு மிகவும் பெருமிதம் தருகிறது. ஏற்கனவே, நாஸ்கார், சூப்பர்ஜிடி, ஃபார்முலா-1 உள்ளிட்ட பந்தயங்களில் தேசிய கொடியை ஏந்தி சென்றுள்ளேன். இந்த நிலையில், இந்த போட்டியிலும் அதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே, லீமான்ஸ் போட்டியில் ஒரு முறை கலந்து கொண்டுள்ளேன். அது மிகவும் கிளர்ச்சியான அனுபவத்தை தர வல்லது. நிச்சயம் வலுவான நிலையில் பந்தயத்தை நிறைவு செய்வோம்," என்று கூறியுள்ளார்.
அர்ஜூன் மெய்னி கூறுகையில்," மீண்டும் பந்தய களத்தில் இறங்குவது மகிழ்ச்சி தருகிறது. முழுக்க முழுக்க இந்திய அணி சார்பில் பங்கேற்பது மேலும் சிறப்பானதாக கருதுகிறேன். ஏற்கனவே லீமான்ஸ் 24 ஹவர்ஸ் பந்தயத்தில் பங்கேற்றுள்ளேன். அது ஒரு அபரிதமான மகிழ்ச்சியையும், அனுபவத்தையும் தரும்," என்று தெரிவித்தார்.
நவீன் ராவ் கூறுகையில்," என்னுடைய கார் பந்தய வாழ்க்கையில், லீமான்ஸ் போட்டியில் பங்கேற்பது முத்தாய்ப்பான விஷயமாக அமையும். என்னுடைய பூர்வீக தேசத்திற்காக லீமான்ஸ் கார் பந்தயத்தில் பங்கேற்பது பெரு மகிழ்ச்சி தருகிறது. இது நீண்ட நாள் கனவும் கூட," என்று கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications








