ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு சூப்பரான பரிசு வழங்கிய ரெனால்ட்... என்னனு தெரியுமா?
ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு ரெனால்ட் நிறுவனம் சூப்பரான பரிசு ஒன்றை வழங்கியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், பளு தூக்குதலில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த மீராபாய் சானுவிற்கு, ரெனால்ட் இந்தியா நிறுவனம் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரை தற்போது பரிசாக வழங்கியுள்ளது. ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவின் துணை தலைவரான சுதிர் மல்ஹோத்ரா, கைகர் காரின் சாவியை மீராபாய் சானுவிடம் ஒப்படைத்தார்.

ரெனால்ட் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் நடப்பாண்டுதான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை அப்போது 5.45 லட்ச ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது (எக்ஸ் ஷோரூம்). இந்த குறைவான விலை நிர்ணயம் காரணமாக, இந்திய வாடிக்கையாளர்களை ரெனால்ட் கைகர் வெகுவாக கவர்ந்தது.

ரெனால்ட் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி கார், RXE, RXL, RXT, RXZ என 4 ட்ரிம் லெவல்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எஸ்யூவி காரில், 100 பிஎஸ் பவர் மற்றும் 160 என்எம் டார்க் திறனை வழங்க கூடிய 1.0 லிட்டர், டர்போசார்ஜ்டு மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படுகிறது.

இதுதவிர 72 பிஎஸ் பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை வழங்க கூடிய 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வையும் ரெனால்ட் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி பெற்றுள்ளது. இதில், 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் தேர்வுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர் பாக்ஸ் தேர்வுகளை ரெனால்ட் நிறுவனம் வழங்குகிறது.

அதே சமயம் 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு சிவிடி கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த சூழலில் ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக, ரெனால்ட் கைகர் காரின் RXT (O) வேரியண்ட் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பொதுவாக ஒலிம்பிக் போன்ற விளையாட்டு திருவிழாக்களில் சாதனை படைக்கும் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கார் போன்ற பரிசுகள் வழங்கப்படுவது வழக்கமானதுதான். மீராபாய் சானுவை போல், இதே டோக்கியோ ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்க பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.

அவருக்கு மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி காரை பரிசாக அறிவித்துள்ளார். மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இன்னும் இந்த எஸ்யூவியை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளை மஹிந்திரா நிறுவனம் தொடங்கவில்லை.

எனவே வெகு விரைவில் நீரஜ் சோப்ராவிற்கு மஹிந்திரா எக்ஸ்யூவி700 பரிசாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தோம். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மஹிந்திராவின் புதிய டெஸ்ட் டிராக்கில் வைத்து, இந்த எஸ்யூவியை நாங்கள் பரிசோதனை செய்தோம்.

அப்போது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி எங்களை வெகுவாக கவர்ந்தது. மிக குறைவான விலையில் பல்வேறு சொகுசான வசதிகளை மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி700 காரில் வழங்கியுள்ளது. இதேபோல் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஒலிம்பிக் கதாநாயகர்களுக்கு அதிரடியாக பரிசுகளை அறிவித்துள்ளது.

ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு வித்தியாசமானது. ஏனெனில் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாதவர்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பரிசு அறிவித்துள்ளது. அதாவது டோக்கியோ ஒலிம்பிக்கில் நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவற விட்டவர்களுக்கு அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் பரிசாக வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

டாடா அல்ட்ராஸ் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா, ஹூண்டாய் ஐ20 உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. இது குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற மூன்று மேட் இன் இந்தியா கார்களில் ஒன்று என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








