மகளிர் தினத்தில், பெண் வாடிக்கையாளர்களுக்கான சலுகைகளை அறிவித்த ரெனால்ட்!! காத்திருக்கும் பரிசு பொருட்கள்
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் வாடிக்கையாளர்களுக்கென அட்டகாசமான சலுகைகளை ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

பிரெஞ்சு நாட்டை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் கார்களை விற்பனை செய்துவரும் ஆட்டோமொபைல் நிறுவனமாக ரெனால்ட் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் தான் கைகர் என்ற பெயரில் எஸ்யூவி கார் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் இன்று (மார்ச் 8) உலகளவில் முழுவதும் அனைவராலும் கொண்டாடப்பட்டுவரும் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சலுகைகளை ரெனால்ட் வழங்கியுள்ளது.

மார்ச் 8ஆம் தேதியில் இருந்து 14ஆம் தேதி வரையில் அமலில் இருக்கவுள்ள இந்த சலுகைகள் முழுக்க முழுக்க பெண் வாடிக்கையாளர்களின் ரெனால்ட் கார்களுக்கான பழுதுபார்ப்பு உள்ளிட்ட சேவைக்கானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றப்படி புதிய ரெனால்ட் கார் ஒன்றை பெண் ஒருவர் வாங்குவதை ஊக்கப்படுத்துவதாக இல்லை.

இந்த மகளிர் தின சலுகைகளின்படி ரெனால்ட்டின் பெண் வாடிக்கையாளர்களின் கார்கள் இலவசமாக அவர்களது வீட்டில் இருந்து எடுத்து செல்லப்பட்டு பழுதுபார்ப்பு நடவடிக்கைகள் முடிந்த பின் மீண்டும் அவர்களது இருப்பிடத்திற்கே கொண்டுவரப்படும்.

இதனால் தேவைப்படும் பழுதுபார்ப்பிற்கான கட்டணத்தை மட்டும் அவர்கள் செலுத்தினால் போதும். இந்த கட்டணத்தையும் முழுவதுமாக செலுத்த தேவையில்லை. வாகன பாகங்களின் விலையில் மற்றும் பணியாளர்கள் கட்டணத்தில் 10 சதவீதம் குறைக்கப்படும்.

அதேபோல் காரின் உத்தரவாத மற்றும் பயணத்திற்கு இடையில் தேவைப்படும் பழுதுப்பார்ப்பு உதவிகளை பெறுவதற்கான காலங்களையும் 10 சதவீத பணம் தள்ளுபடி உடன் அதிகரித்து கொள்ள முடியும். இவற்றுடன் கார் சேவையை பெறும் பெண் வாடிக்கையாளர்களுக்கு நிச்சய பரிசு பொருட்களும் வழங்கப்படும் என்று ரெனால்ட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் கார்கள் விற்பனையில் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தாவிடினும் ரெனால்ட் இந்தியா நிறுவனம் மொத்தம் 338 சேவை மையங்களை நம் நாட்டில் கொண்டுள்ளது. அதேநேரம் இந்த பிரெஞ்சு ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு 498 அங்கரீக்கப்பட்ட டீலர் ஷோரூம்கள் இந்தியாவில் உள்ளன.


Click it and Unblock the Notifications








