ஆக்டேவியாவிற்கு இணையான தோற்றத்தில் உருவாகும் ஸ்கோடாவின் புதிய செடான்!! ரேபிட் நிறுத்தப்படுகிறதா?
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய நடுத்தர-அளவு செடான் கார் ஒன்று இந்தியாவில் சாலை சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சந்தையில் நடுத்தர-அளவு எஸ்யூவி காராக குஷாக் மாடலையும், நடுத்தர-அளவு செடான் கார் ஒன்றையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அடுத்த ஒரு வருடத்திற்குள்ளாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள இவற்றில் குஷாக் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதனை தொடர்ந்து புதிய நடுத்தர-அளவு செடான் கார் கொண்டுவரப்பட உள்ளது.

இந்த நிலையில், ஸ்கோடாவின் செடான் கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. புனேவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்டம் தொடர்பான ஸ்பை படங்கள் டீம் பிஎச்பி செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன.

ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் மாருதி சுஸுகி சியாஸ் உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக கொண்டுவரப்படவுள்ள இந்த செடான் கார் தற்போதைக்கு ஏஎன்பி என்ற குறியீட்டு பெயரால் குறிக்கப்பட்டு வருகிறது.

ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் எம்க்யுபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த புதிய செடான் கார் ஸ்கோடாவின் அடையாள க்ரில், ஹலோஜன் ஹெட்லேம்ப்கள் மற்றும் ஃபாக் விளக்குகளை பெற்றுவரவுள்ளதை இந்த ஸ்பை படங்கள் வெளிக்காட்டுகின்றன.

புதிய ஸ்கோடா ஆக்டேவியாவை போன்று இதன் பின்பக்கமும் நோட்ச்பேக் ஸ்டைலில் உள்ளது. அதாவது மேற்கூரை பகுதி கூர்மையான எட்ஜ்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடுத்தர-அளவு செடான் காரின் உட்புறம் கிட்டத்தட்ட விரைவில் அறிமுகமாகும் குஷாக் எஸ்யூவி காரை ஒத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோடாவின் ரேபிட் செடானிற்கு மாற்றாக இந்த புதிய செடான் கார் கொண்டுவரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் அதேவேளையில் ஹோண்டா சிட்டி கார்களை போன்று இந்த செடான் காரும் ரேபிட் உடன் விற்பனை செய்யப்படலாம்.

புதிய ஸ்கோடா ஏஎன்பி செடான் கார் இரு என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் ஒன்றாக அதிகப்பட்சமாக 113 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

மற்றொரு 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 147 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இவை இரண்டுடனும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்பட உள்ளன.

இதற்கு மத்தியில் புதிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் புதிய ஆக்டேவியா காரும் ஸ்கோடா பிராண்டில் இருந்து வெளிவரவுள்ளது. அதேநேரம் கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரையும் இந்தியாவிற்கு கொண்டுவர இந்த நிறுவனம் தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications








