12 மாதங்களில் 4 புதிய கார்கள்... இந்தியாவில் அதிரடி காட்டும் ஸ்கோடா!
அடுத்த 12 மாதங்களில் 4 புதிய கார் மாடல்களை இந்தியாவில் களமிறக்க உள்ளதாக ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய தகவல் ஸ்கோடா கார் பிரியர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது. இதுதொடர்பான விரிவானத் தகவல்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய கார் சந்தையை ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற முடிவில் வரிந்து கட்டி வேலை பார்த்து வருகிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். இந்தியர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களுடன் புதிய கார் மாடல்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் இறங்கி உள்ளது.

அந்த வகையில், அடுத்த 12 மாதங்களில் 4 புதிய கார் மாடல்களை களமிறக்க உள்ளதாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா தலைவர் ஸாக் ஹொல்லிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த 4 புதிய கார் மாடல்களில் முதலாவது மாடலாக குஷாக் எஸ்யூவி இந்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ரேபிட் காரின் சிஎன்ஜி எரிபொருள் வகை மாடலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதையும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

இதனிடையே, புத்தம் புதிய சி செக்மென்ட் செடான் கார் மாடலை களமிறக்க உள்ளதாக அவர் ஏற்கனவே கூறி இருந்தார். இந்த ஆண்டு இறுதியில் இந்த புதிய செடான் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய செடான் கார் மாடல் ரேபிட் காரைவிட பரிமாணத்தில் பெரிய காராக இருக்கும். இந்த கார் ஸ்லேவியா என்ற பெயரில் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

மேலும், அடுத்து ஒரு புதிய எஸ்யூவி மாடலும் ஸ்கோடா நிறுவனத்தின் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது. இதன்மூலமாக, இந்திய கார் சந்தையில் குறிப்பிடத்தக்க சந்தை பங்களிப்பை பெற்றுவிடுவதற்கு முனைப்புடன் செயலாற்றி வருகிறது ஸ்கோடா நிறுவனம்.

மேலும், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் வகை கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்வதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும், ஸ்கோடா நிறுவனத்தின் டர்போ பெட்ரோல் மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. எனவே, டர்போ பெட்ரோல் அல்லது சிஎன்ஜி மாடல்களை தொடர்ந்து விற்பனை செய்வதற்கு ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








