ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய அறிமுக விபரம்!
ஸ்கோடா கோடியாக் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இருந்து வந்தது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, இந்த எஸ்யூவியின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி ஃபேஸ்லிஃப்ட் மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த எஸ்யூவி நடப்பு ஆண்டின் மூன்றாவது காலாண்டு காலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று ஸ்கோடா இந்தியா நிர்வாக இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் தெரிவித்துள்ளார்.

தோற்றத்தில் கூடுதல் பொலிவுடன் இந்த எஸ்யூவி வர இருக்கிறது. புதிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் இடம்பெற்றிருக்கும். க்ரில் அமைப்பு மற்றும் பம்பர் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும். அதேநேரத்தில், ஒட்டுமொத்த தோற்றத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது.

இந்த புதிய மாடலில் பெரிய தொடுதிரை அமைப்புடன் கூடிய இன்ஃபோடெயெின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது.

பனோரமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் முன் இருக்கைகள், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வாய்ஸ் அசிஸ்டென்ஸ் உள்ளிட்ட வசதிகளும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கும்.

இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு கொடுக்கப்படும் என தெரிகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 188 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டமும் இடம்பெற்றிக்கும்.

புதிய ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்போது, டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, எம்ஜி க்ளோஸ்ட்டர் ஆகிய எஸ்யூவிகளுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








