ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுகம் 2022 ஜனவரியில்!! உறுதிப்படுத்தியுள்ள ஸ்கோடா சிஇஓ!
ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் வருகிற ஜனவரி மாதத்தில் அறிமுகமாக உள்ளதாக ஸாக் ஹோலிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் இந்த புதிய ஸ்கோடா கார் குறித்தும் முழுமையாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

சமூக வலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்க கூடியவர் ஸ்கோடா இந்தியா ஆட்டோ நிறுவனத்தின் சிஇஓ ஸாக் ஹோலிஸ். அவ்வப்போது நெட்டிசன்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் இவர் சமீபத்தில் கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் காரின் இந்திய வருகையை டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

"இந்தியாவில் புதிய கோடியாக் எப்போது அறிமுகமாகும், ஸாக் ஹோல்ஸ்?" என டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு சிம்பிளாக, 2022 ஜனவரியில் என ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவன சிஇஓ தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த ஸ்கோடா எஸ்யூவி காரின் இந்திய வருகை உறுதியாகியுள்ளது.

மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி க்ளோஸ்டர் போன்ற விலைமிக்க பெரிய-அளவு எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக விளங்கவுள்ள ஸ்கோடா கோடியாக் ஃபேஸ்லிஃப்ட் கார்கள் அறிமுகத்திற்கு பிறகு சிகேடி முறையில் விற்பனை செய்யப்பட உள்ளன. அதாவது பாகங்களாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படும்.

ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் என்பதால், காரின் முன்பக்கத்தில் தான் முக்கியமான அப்கிரேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி கோடியாக்கின் முன்பக்க க்ரில் மற்றும் ஹெட்லேம்ப்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பம்பரும் முன் மற்றும் பின்பக்கத்தில் புதியதாக வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் கோடியாக்கின் ஸ்போர்ட்லைன் ட்ரிம்-ஐயும் ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்யலாம். இந்த ட்ரிம்-இல் காரின் க்ரில், பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள் & ஜன்னல்கள் லைன்கள், மேற்கூரை கம்பிகள், அலாய் சக்கரங்கள் மற்றும் பின்பக்க ஸ்பாய்லர் உள்ளிட்டவை அனைத்தும் கருப்பு நிறத்தில் வழங்கப்படும்.

கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்டிலும் வழக்கமான 2.0 லிட்டர், டர்போ-பெட்ரோல் என்ஜினையே ஸ்கோடா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 187 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் அனைத்து-சக்கர ட்ரைவ் சிஸ்டம் இணைக்கப்படுகிறது.

இதே என்ஜின் தான் ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் சூப்பர்ப் செடான் கார்களில் வழங்கப்படுகின்றன. அறிமுகத்தை தொடர்ந்து கோடியாக் கார்கள் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு தயாரிக்கும் பணிகளும் அதே ஜனவரி மாதத்தில் துவங்கலாம். அல்லது இந்த டிசம்பர் மாத இறுதியில் இருந்தே ஆரம்பிக்கப்படலாம்.

புதிய கோடியாக் ஃபேஸ்லிஃப்ட்டின் உட்புறத்தில் 2-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், புதிய ஸ்டைலான மற்றும் கூடுதல் சவுகரியத்தை வழங்கக்கூடிய இருக்கைகள், தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டருக்கு மாற்றாக டிஜிட்டல் தரத்தில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட உள்ளன.

இவற்றுடன் பனோராமிக் சன்ரூஃப், பன்முக வசதி கொண்ட ஸ்டேரிங் சக்கரம், க்ரூஸ் கண்ட்ரோல், அதிக எண்ணிக்கைகளில் ஏர்பேக்குகள், கேபினை சுற்றிலும் மின் விளக்கு, பிரீமியம் ஸ்பீக்கர், காற்றோட்டமான மற்றும் மசாஜ் வசதி கொண்ட இருக்கைகள், ஆர்ம்ரெஸ்ட், முன் மற்றும் ரிவர்ஸில் செல்வதற்கு உதவியாக பார்க்கிங் சென்சார்கள் என ஏகப்பட்ட பிரீமியம் தர வசதிகள் 2021 கோடியாக்கில் இடம் பெற்றுள்ளன.

இதற்கிடையில் இந்த ஸ்கோடா எஸ்யூவி காரின் மேற்கூரையின் மீது ஹெலிகாப்டர் ஒன்று நிற்க வைக்கப்பட்டு சமீபத்தில் சாதனை புரியப்பட்டிருந்தது. இதன் மூலம் அதிக எடையை கூட தாங்கும் திறன் உடன் 2021 ஸ்கோடா கோடியாக் தயாரிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. மேலும், இந்த சாதனை தொடர்பான வீடியோ பலத்தரப்பட்ட கார் ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.

இதேபோன்று முன்னதாக புதிய தலைமுறை க்ரெட்டாவின் அதிக உறுதியான கட்டமைப்பை வெளிக்காட்டும் வகையில் ஓர் வீடியோவை ஹூண்டாய் வெளியிட்டு இருந்தது. தற்சமயம் பெரிய-அளவு எஸ்யூவி கார்களின் விற்பனையில் ஃபோர்டு எண்டேவியரின் வெளியேற்றத்தால், டொயோட்டா ஃபார்ச்சூனர் தான் முன்னிலை வகித்து வருகிறது.

எந்த அளவிற்கு என்றால், ஃபார்ச்சூனர் கடந்த செப்டம்பர் மாதத்தில் 1,869 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் முழு-அளவு எஸ்யூவி கார்கள் விற்பனையில் இதற்கடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள எம்ஜி க்ளோஸ்டர் 200க்கு சற்று அதிகமான யூனிட்களே விற்கப்பட்டுள்ளது. இதில் இருந்து டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு இந்திய சந்தையில் எத்தகைய வரவேற்பு கிடைக்கிறது என்பதை பார்த்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








