இமயமலை முதல் நீலகிரி மலை வரை... குஷாக் எஸ்யூவி 17 லட்சம் கிலோமீட்டர் சோதனை... ஒரு பிரச்னையும் இருக்காது
குஷாக் எஸ்யூவியை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வைத்து பல லட்சம் கிலோமீட்டர் சோதனை செய்துள்ளதாக ஸ்கோடா இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. அனைத்து சோதனைகளும் திருப்திகரமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளது.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் குஷாக் என்ற எஸ்யூவியை ஸ்கோடா நிறுவனம் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற சிறந்த தேர்வுகள் இருந்து வருகின்றன. இந்த சந்தையில் உள்ள பிற மாடல்கள் பெரும்பான்மை வாடிக்கையாளர்களை கவராத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், க்ரெட்டா, செல்டோஸ் கார்களுக்கு சிறந்த மாற்றுத் தேர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், குஷாக் எஸ்யூவியின் டிசைன், சிறப்பம்சங்கள், எஞ்சின் தேர்வுகள் உள்ளிட்ட பல முக்கியத் தகவல்கள் ஏற்கனவே வெளியானது. தற்போது இந்த காரின் சோதனை ஓட்டம் குறித்த சில முக்கியத் தகவல்களை ஸ்கோடா இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது, குஷாக் எஸ்யூவி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வைத்து 17 லட்சம் கிலோமீட்டர் தூரம் சோதனை ஓட்டம் செய்யப்பட்டு இருக்கிறது. பல்வேறு கால நிலை மற்றும் சாலை நிலைகளில் வைத்து இதன் எஞ்சின், கியர்பாக்ஸ் உள்ளிட்டவற்றின் செயல்திறன் சோதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் வைத்து மிக கடுமையான கோடை வெயிலிலும், இமயமலைப் பிரதேசம் மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் வைத்து மிக குறைந்த வெப்ப நிலைகளிலும் சோதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைத்து மிக அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது.

மிக மோசமான சாலைகள், கன மழை மற்றும் மழை வெள்ளச் சாலைகளிலும் வைத்து சோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சோதனை ஓட்டங்கள் மிகவும் திருப்திகரமாக அமைந்தது. இதனால், அனைத்து நிலைகளிலும் குஷாக் எஸ்யூவி வாடிக்கையாளர்களுக்கு எந்த பிரச்னையும் தராது என்ற வகையில் இந்த தகவல்களை ஸ்கோடா பகிர்ந்து கொண்டுள்ளது.

ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் க்ளட்ச் அமைப்பும் மிக கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் வைத்து இதன் க்ளட்ச் முழுமையாக சோதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஸ்கோடா தெரிவித்துள்ளது.

சோதனை ஓட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், தரவுகளின் அடிப்படையில் முன்பக்க க்ரில் அமைப்புக்கு பின்னால் பொருத்தப்பட்டு இருந்த ஹாரன், பம்பருக்கு பின்பக்கத்திற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தக்கவாறு இதன் இன்டீரியர் மற்றும் வசதிகள் மிகச் சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து, குஷாக் காருக்கு பிரத்யேக தொழில்நுட்ப மையமும், சர்வீஸ் மையங்களில் பிரத்யேக பழுது நீக்கும் மற்றும் பராமரிப்புப் பகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களால் குஷாக் எஸ்யூவி மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

புதிய ஸ்கோடா குஷாக் எஸ்யூவி 150 பிஎஸ் பவரை வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 115 பிஎஸ் பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் என இரண்டு விதமான பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. ஜூலை மாதத்தில் இருந்து டெலிவிரிப் பணிகள் துவங்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








