சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
ஸ்கோடா ரேபிட் செடான் கார் சிஎன்ஜி வேரியண்ட்டில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிறுவனத்தின் சிஇஒ ஜாக் ஹோலிஸ் தெரிவித்துள்ளார். எவ்வாறான அம்சங்களுடன் இந்த சிஎன்ஜி காரை எதிர்பார்க்கலாம் என்பன உள்ளிட்டவை விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

அடுத்த 12 மாதங்களில் நான்கு புதிய தயாரிப்பு வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்படி முதல் மாடலாக குஷாக் எஸ்யூவி கார் வருகிற மார்ச் 18ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த ஆண்டு மத்தியில் இருந்து விற்பனையை துவங்கலாம் என எதிர்பார்க்கப்படும் குஷாக்கை தொடர்ந்து தற்போதைய ரேபிட் செடான் காரில் முக்கியமான அப்கிரேட்களை ஸ்கோடா வழங்கவுள்ளதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் தற்போது ரேபிட் காரின் சிஎன்ஜி வெர்சனை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் திட்டம் ஸ்கோடாவிடம் உள்ளதா என நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு, உள்ளது என ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை, சேவை & சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் பதிலளித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சிஎன்ஜி என்ஜின் அமைப்புகளை சோதனை செய்யும் பணியினை ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே துவங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் சிஎன்ஜி வேரியண்ட்டை பெறும் முதல் காராக ரேபிட் செடானை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சென்ற ஆண்டில் கூட ரேபிட் சிஎன்ஜி காரின் சோதனை மாதிரி ஒன்று பொது சாலையில் அடையாளம் காணப்பட்டு இருந்தது. ரேபிட்டில் வழங்கப்படும் இந்த சிஎன்ஜி தேர்வு கூட்டணி நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின் போலோ, வெண்டோ கார்களிலும் பயன்படுத்தப்படலாம்.

தற்சமயம் ஸ்கோடா ரேபிட் ஒரே ஒரு 1.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் தேர்வில் மட்டுமே வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 110 பிஎஸ் மற்றும் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

புதிய சிஎன்ஜி வேரியண்ட்டிலும் இதே 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் கூடுதலாக சிஎன்ஜி தொகுப்புடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக என்ஜின் பெறக்கூடிய ஆற்றல் அளவுகள் குறைய வாய்ப்பிருந்தாலும், கார் வழங்கும் மைலேஜ் கணிசமான அளவு அதிகரிக்கும்.

மைலேஜ் அளவை தெரிந்து கொள்ள ரேபிட் சிஎன்ஜி காரின் அதிகாரப்பூர்வ வெளியீடு வரை காத்திருந்தாக வேண்டும். பெட்ரோல் & டீசல் விலைகள் சமீபத்தில் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக அதிக மைலேஜ் வழங்கக்கூடிய கார்களையே வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டே ரேபிட்டின் சிஎன்ஜி வெர்சனை கொண்டுவர ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








