புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரின் அறிமுக தேதி வெளியானது... புக்கிங்கும் துவங்கியது!
கொரோனாவால் தள்ளிப்போடப்பட்டு வந்த புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த காருக்கு புக்கிங் துவங்கப்பட்டுள்ளதுடன், அறிமுக தேதியும் வெளியாகி இருக்கிறது.

எக்ஸிகியூட்டிவ் செடான் கார் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக ஸ்கோடா ஆக்டேவியா இருந்து வருகிறது. மிக நீண்ட காலமாக இந்தியர்களிடம் பிரபலமான இந்த மாடல் தற்போது அதிக சிறப்பம்சங்களுடன் நான்காம் தலைமுறை மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த புதிய மாடல் இந்தியர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், இந்த காரின் அறிமுகம் கொரோனாவால் தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வந்தது.

இந்த சூழலில், வரும் ஜூன் 10ந் தேதி இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக டீம் பிஎச்பி தளம் மூலமாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், புக்கிங்கும் துவங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விருப்பப் பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கோடாவிடம் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காருக்கு ரூ.27.50 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்படலாம் என்றும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எக்ஸ்ஷோரூம் விலையா அல்லது ஆன்ரோடு விலையா என்ற குறிப்புஇல்லை. ஆனால், டீலர்களில் விசாரணை செய்து கொண்டு, வாடிக்கையாளர்கள் இதனை வைத்து முன்பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா கார் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் MQB EVO என்ற கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. பழைய மாடலைவிட சற்று கூடுதல் வீல்பேஸ் நீளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், கேபினில் கூடுதல் இடவசதியை எதிர்பார்க்கலாம்.

எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில் லைட்டுகள், புதிய அலாய் வீல்கள் இந்த காரின் மதிப்பை கூட்டும் விஷயங்களில் முக்கியமானதாக இருக்கும்.

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வர இருக்கிறது. மற்றொரு 2.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கொடுக்கப்படும்.


Click it and Unblock the Notifications








