இந்தியாவிலேயே உற்பத்தி... எலெக்ட்ரிக் கார்களுக்காக ஸ்கோடா போட்ட அதிரடி திட்டம்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கு ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், பெரிய அளவிலான முதலீடுகளை செய்வதற்கும் முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்கோடா நிறுவனம் இந்தியாவில் அதிரடி திட்டங்களுடன் செயலாற்றி வருகிறது. இந்தியாவில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் பிராண்டுகளில் வர இருக்கும் புதிய கார்களுக்கான திட்டங்களையும் ஸ்கோடா நிறுவனம் கையாண்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் வலுவான வர்த்தகத்தை பெறுவதற்காக ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் பிராண்டுகளில் பல புதிய மாடல்களை களமிறக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன்படி, இந்தியாவுக்கான முக்கிய அம்சங்களுடன் புதிய கார் மாடல்களை இரண்டு பிராண்டுகளிலும் களமிறக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனை மனதில் கொண்டு, எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் இந்தியாவில் களமிறக்க ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. அத்துடன், இந்தியாவிலேயே எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ சிஇஓ தாமஸ் சாஃபர் டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்திடம் கூறியிருப்பதாவது,"உலக அளவில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். பசுமை வாகனங்களுக்கு இந்தியா மிக முக்கியமான சந்தையாக இருக்கும். இந்த தசாப்த இறுதியில் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் பிராண்டுகளில் 30 சதவீதம் அளவுக்கு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையில் இருக்கும்.

எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஏதுவாக, உள்ளூரிலேயே உதிரிபாகங்கள் சப்ளையை பெற்று உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன்மூலமாகவே, எலெக்ட்ரிக் வாகன வர்த்தகத்தை செம்மையாக கொண்டு செல்ல முடியும்," என்று தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் கார்களுக்கு கிடைக்கும் வரவேற்பையும், வர்த்தகத்தையும் ஆய்வு செய்வதற்கு, இந்திய அரசு இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி ஆலையை அமைப்பதற்கான திட்டமும் ஸ்கோடா வசம் இருக்கிறது.

இந்தியாவிலேயே முக்கிய உதிரிபாகங்களை சப்ளை பெற்று, அசெம்பிள் செய்யும்போது விலையை மிக சரியாக நிர்ணயிக்க முடியும். விற்பனையும் சிறப்பாக இருக்கும் என்று ஸ்கோடா கருதுகிறது. எனினும், முதல் மாடலாக என்யாக் iV எலெக்ட்ரிக் காரை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.

ஐரோப்பாவில் ஸ்கோடா என்யாக் iV எலெக்ட்ரிக் காரில் 55-82kWh வரையிலான திறன் கொண்ட பேட்டரித் தொகுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பேட்டரி மற்றும் மின் மோட்டாரை பொறுத்து 148 முதல் 265 எச்பி பவரை வழங்கும் திறன் கொண்ட மாடல்களில் தேர்வுக்கு கொடுக்கப்படுகிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 340 முதல் 510 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








