குஷாக் எஸ்யூவி காரின் மீது இவ்வளவு நம்பிக்கையா!! 2022ல் கார்களின் விற்பனையை 60,000ஆக உயர்த்துவோம் - ஸ்கோடா!
இந்தியாவில் அடுத்த 2022ஆம் ஆண்டில் கார்களின் விற்பனையை 60,000ஆக அதிகரிக்க அனைத்து விதங்களிலும் தயாராகி வருவதாக ஸ்கோடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

செக் குடியரசு நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் கடந்த வாரத்தில் குஷாக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது.

ஆக்டிவ், ஆம்பிஷன் மற்றும் ஸ்டைல் என மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ள இதன் ஆரம்ப விலை ரூ. 10.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக ரூ.17.59 லட்சம் வரையில் குஷாக்கின் விலைகள் உள்ளன.

இந்த விலைகள் சற்று அதிகம் என்றாலும் இந்த ‘முதல்-இந்தியா-தயாரிப்பு' க்ராஸ்ஓவரின் மீது மிகுந்த நம்பிக்கையை ஸ்கோடா வைத்துள்ளது. இந்த நிலையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை & சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் ஸாக் ஹோலிஸ் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், நடப்பு 2021ஆம் நிதி ஆண்டிற்குள் 30,000 கார்களை விற்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை ஸ்கோடா இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டில் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் சுமார் மூன்று மடங்கு அதிகமாகும்.

மேலும் இந்த எண்ணிக்கையை அடுத்த 2022ஆம் நிதியாண்டில் இரட்டிப்பாக்க, அதாவது 60,000 யூனிட்களாக அதிகரிக்க பணியாற்றி வருவதாக ஹோலிஸ் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இதற்கு ஸ்கோடாவின் சமீபத்திய அறிமுகங்களான குஷாக் மற்றும் புதிய ஆக்டேவியா முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி தற்சமயம் விற்பனையில் உள்ள ராபிட் செடான் காருக்கு மாற்றாக, விரைவில் ஸ்கோடா பிராண்டில் இருந்து அறிமுகமாகவுள்ள செடான் காரின் மீதும் ஸ்கோடா இந்தியா நிறுவனம் நம்பிக்கை வைத்துள்ளது.

எம்க்யுபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த செடான் கார் 2021ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. இந்த செடான் காரின் வருகையை பல முறை சிஇஓ தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

கிட்டத்தட்ட 10 வருடங்களாக ஸ்கோடா ராபிட் கார் இந்தியாவில் விற்பனையில் இருந்து வருகிறது. சந்தையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போட்டியினை சமாளிக்க வேண்டுமென்றால் இத்தகைய அதிரடி மாற்றங்களை கொண்டுவர வேண்டியது கட்டாயமாகும்.

இருப்பினும் எத்தகைய செடான் கார் இந்திய சந்தைக்கு வரவுள்ளது என்பது தற்போதைக்கு தெரியவில்லை. இதன் சோதனை ஓட்ட ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது, ஸ்கோடாவின் புதிய செடான் பரிமாண அளவுகளில் ராபிட்டை காட்டிலும் பெரியதாக கொண்டுவரப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








