புதிய தலைமுறை ஃபேபியா கார் எப்போது இந்தியாவில் அறிமுகம்? - ஸ்கோடா அதிகாரியின் பதில்
புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் இந்திய அறிமுகம் குறித்து அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஸாக் ஹொல்லிஸ் புதிய தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஸ்கோடா நிறுவனத்தின் ஃபேபியா ஹேட்ச்பேக் காருக்கு உலக அளவில் பெரிய அடையாளம் உண்டு. இந்தியாவிலும் இந்த காருக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். நேர்த்தியான டிசைன், சிறந்த கட்டமைப்புத் தரம் ஆகியவை இந்த காருக்கு அதிக மதிப்பை வழங்கும் விஷயங்கள். ஸ்கோடா நிறுவனத்தின் விற்பனைக்கு பிந்தைய சேவை தரம் இந்தியர்கள் மத்தியில் எடுபடாததால், சில ஆண்டுகளுக்கு ஃபேபியா கார் விற்பனையில் இருந்து விலக்கப்பட்டது.

இந்த நிலையில், அண்மையில் முற்றிலும் புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் உலக அளவில் வெளியிடப்பட்டது. மேலும், ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் சுறுசுறுப்பாக இயங்கத் துவங்கி இருப்பதுடன் பல புதிய மாடல்களை களமிறக்கி வருகிறது. எனவே, புதிய தலைமுறை ஃபேபியா காரும் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

புதிய தலைமுறை ஃபேபியா கார் இந்திய அறிமுகம் குறித்து சமூக வலைதளம் மூலமாக ஸ்கோடா இந்தியா இயக்குனர் ஸாக் ஹொல்லிஸிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு அவர்,"இந்தியாவில் புதிய மாடல்களை கொண்டு வருவதற்கான திட்டங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஆனால், புதிய ஃபேபியா காரை கொண்டு வருவது குறித்து தற்சமயம் எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் ஃபேபியா காரை எதிர்பார்த்திருந்த இந்தியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும், புதிய ஃபேபியா காருக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு இருக்கும் என்றும், கொண்டு வருவதற்கு முயற்சி செய்யுங்கள் என்றும் அவரை வலியுறுத்தி உள்ளனர்.

புதிய ஸ்கோடா ஃபேபியா கார் பல்வேறு விதங்களில் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. முந்தைய தலைமுறை மாடலுடன் ஒப்பிடுகையில், புதிய தலைமுறை மாடலின் வீல்பேஸ் நீளம் 94 மிமீ அதிகரிக்கப்பட்டு 2,564 மிமீ ஆக மாறி இருக்கிறது. இதேபோன்று, அகலத்திலும் 48 மிமீ அதிகரிக்கப்பட்டு 1,780 மிமீ ஆக மாற்றம் கண்டுள்ளது. இதனால், உட்புறத்தில் சிறப்பான இடவசதியை பயணிகள் உணர முடியும்.

புதிய பொலிவுடன் க்ரில் அமைப்பு, எல்இடி பல்புகள் கொண்ட ஹெட்லைட் யூனிட்டுகள், 9.2 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், கை அசைவு மூலமாக கட்டுப்படுத்தும் வசதி ஆகியவை உள்ளன.

புதிய ஸ்கோடா ஃபேபியா காரில் 380 லிட்டர் பூட்ரூம் இடவசதி இடம்பெற்றிருக்கும். பின் இருக்கையை மடக்கினால் 1,190 லிட்டர்கள் வரை அதிகரிக்க முடியும்.

புதிதய ஸ்கோடா ஃபேபியா காரில் இரண்டு 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகிறது. 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 65 எச்பி பவரையும், 80 எச்பி பவரையும் வழங்கும் இரண்டுவிதமான மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

அடுத்து, 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 95 எச்பி பவரையும், 110 எச்பி பவரையும் வழங்கும் இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. 95 எச்பி மாடலுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், 110 எச்பி பவரை வழங்கும் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் வழங்கப்படுகிறது.

விலை உயர்ந்த 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 எச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த மாடல் பூஜ்யத்திலிருந்து 100 கிமீ வேகத்தை 7.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 225 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது.

இந்தியாவில் மிக தீவிரமான வர்த்தக நடவடிக்கைகளை ஸ்கோடா ஆட்டோ மேற்கொண்டு வருகிறது. எனவே, புதிய ஃபேபியா காரை இந்தியா கொண்டு வருவதற்கு நிச்சயமாக பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் புதிய ஸ்கோடா ஃபேபியா கார் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கருதலாம்.


Click it and Unblock the Notifications








