இந்தியாவில் காட்சிதந்த நடுத்தர-அளவு சுஸுகி விட்டாரா எஸ்யூவி கார்!! 2022ல் உலகளவில் வெளியீடு?
நடுத்தர-அளவு விட்டாரா எஸ்யூவி கார் ஒன்று மாருதி சுஸுகி நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அருகே அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் விட்டாரா நடுத்தர-அளவு எஸ்யூவி காரை பல தசாப்தங்களாக வெளிநாட்டு சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது. இந்த நடுத்தர-அளவு சுஸுகி எஸ்யூவி காரின் கடைசி தலைமுறை உலகளவில் 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்பின் 2018ல் விட்டாராவிற்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடினை சுஸுகி நிறுவனம் வழங்கியது. விட்டாராவின் 30 வருட நிறைவை கொண்டாடும் விதமாக குறிப்பிடத்தக்க அப்டேட்களுடன் இந்த அப்கிரேடை சுஸுகி கொண்டுவந்திருந்தது. இந்த நிலையில் விட்டாராவின் புதிய தலைமுறை பற்றிய செய்திகள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதனால் உலகளவில் புதிய ஐந்தாம்-தலைமுறை விட்டாரா அடுத்த 2022ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த நிலையில் தான் தற்போது விட்டாரா கார் மாதிரி ஒன்று மாருதி சுஸுகியின் தொழிற்சாலை உள்ள குர்கான் பகுதியில், லாரி ஒன்றின் மீது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஸ்பை படங்கள் காடிவாடி செய்திதளம் மூலமாக நமக்கு கிடைத்துள்ளன. இந்தியாவில் விட்டாரா காட்சி தருவது இது ஒன்றும் முதல்முறையல்ல. இந்த ஸ்பை படங்களில் காரின் முன்பக்கத்தில் மத்தியில் சுஸுகி முத்திரை உடன் செங்குத்தான க்ரோம் க்ரில் ஸ்லாட்கள், கூர்மையான வடிவிலான ஹெட்லேம்ப்களையும், பின்பக்கத்தில் மறைக்கப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்களையும் பார்க்க முடிகிறது.

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள விட்டாரா பிரெஸ்ஸா மாடல் உடன் விட்டாராவை போட்டு குழப்பி கொள்ள வேண்டும். விட்டாரா பிரெஸ்ஸா, அளவில் சற்று சிறிய காம்பெக்ட் எஸ்யூவி காராகும். விட்டாரா தற்போது இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க வேண்டும், அது வேறொன்றும் இல்லை, அடுத்த வருடத்தில் உலகளவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற இதன் ஐந்தாம் தலைமுறை தான்.

இதன் சோதனை பணிகளுக்காக இந்த எஸ்யூவி வாகனம் முழுவதும் வெளிநாட்டில் உருவாக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு மாருதி சுஸுகியின் குர்கான் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம். தற்சமயம் சர்வதேச சந்தைகளில் உள்ள விட்டாராவில் 1.4 லிட்டர் பூஸ்டர்ஜெட் 4-சிலிண்டர் கே14டி டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் ஆனது மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-இல் 129 பிஎஸ் மற்றும் 2,000- 3,000 ஆர்பிஎம்-இல் 235 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

உருவத்தில், ஐந்தாம்-தலைமுறை விட்டாரா தற்போதைய மாடலை காட்டிலும் அளவில் பெரியதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய விட்டாரா 4,175மிமீ நீளமும், 1,775மிமீ அகலமும், 1,610மிமீ உயரமும் கொண்டதாக உள்ளது. புதிய விட்டாராவின் நீளத்தை 4.2 மீட்டரிலும், அகலத்தை 1,780மிமீ-லும், உயரத்தை 1,620மிமீ-லும் எதிர்பார்க்கிறோம்.

மற்றப்படி சக்கரங்களுக்கு இடையேயான தொலைவு (வீல்பேஸ்)-இல் எந்த மாற்றமும் இருக்காது. இதனால் தற்போதைய 2,500மிமீ-இல் தான் வீல்பேஸ் நீளம் இருக்கும். விட்டாராவை தயாரிக்க சுஸுகி பயன்படுத்தும் ப்ளாட்ஃபாரம் அடுத்த வருடத்தில் மிக பெரிய திருத்தத்திற்கு உள்ளாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமுறை விட்டாரா உடன் முற்றிலும் புதிய எஸ்-க்ராஸ் மாடலின் தயாரிப்பு பணிகளிலும் தற்சமயம் ஜப்பானை சேர்ந்த சுஸுகி நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. அடுத்த 2022ஆம் ஆண்டில் முதலாவதாக ஐரோப்பாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய எஸ்-க்ராஸில் ஹைப்ரீட் பவர்ட்ரெயின் தேர்வு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சமீபத்தில் ஜப்பான் நாட்டு சந்தைக்கான வேகன்ஆர் ஸ்மைல் கார் வெளியிடப்பட்டது.

மினி-வேன் போன்றதான இதன் தோற்றம் நெட்டிசன்கள் பலரை கவர்ந்துவிட்டதாக நமது செய்திதளத்தில் கூட தெரிவித்திருந்தோம். இந்திய சந்தையை பொறுத்தவரையில், புதிய தலைமுறை செலிரியோவை அடுத்த மாதங்களில் மாருதி சுஸுகி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. அதேநேரம் டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து நடுத்தர-அளவு எஸ்யூவி காரின் வடிவமைப்பிலும் ஈடுப்பட மாருதி சுஸுகி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








