Front-Wheel-Drive எஸ்யூவி காரை ஏன் ஆஃப்-ரோட்டிற்கு எடுத்து செல்லக்கூடாது? இந்த வீடியோ தான் பதில்!!
இந்தியாவில் தற்சமயம் பிரபலமான கார் பிரிவுகளுள் ஒன்றாக சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவு விளங்குகிறது. இந்த பிரிவில் துவக்கத்தில் இருந்து விற்பனையில் இருக்கும் மாடல்களுள் ஒன்று Ford Ecosport ஆகும்.

Ford Ecosport-ஐ தொடர்ந்தே மற்ற நிறுவனங்கள் தங்களது எஸ்யூவி கார்களை இந்த பிரிவில் களமிறக்கின. இந்த பிரிவில் தற்சமயம் உள்ள அனைத்து கார்களும் முன்சக்கர ட்ரைவிங்கை கொண்டவைகளாக உள்ளன.

ஆதலால் தான் சப்-4 மீ காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் நகர சாலைகளுக்கு மிகவும் ஏற்றவைகளாக, ஸ்போர்டியான பயணத்தை வழங்கக்கூடியவைகளாக விளங்குகின்றன. இருப்பினும் ஆஃப்-ரோடுகளுக்கு இவை முற்றிலுமாக சரிப்பட்டு வராதவை. இதற்கு ஆதாரமாகவே வீடியோ ஒன்றினை கீழே பதிவிட்டுள்ளோம்.
Image Courtesy: AutoWheels India - Cars & RoadTrips
ஆட்டோவீல்ஸ் இந்தியா- கார்ஸ் & ரோடு ட்ரிப்ஸ் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவின் மூலம் முன்சக்கர ட்ரைவ் அமைப்பு கொண்ட கார்கள் ஆஃப்-ரோட்டிற்கு எந்த அளவிற்கு சரிப்பட்டு வராதவை என்பதை தெளிவாக அறியலாம்.

இந்த வீடியோவின் துவக்கத்தில் கிட்டத்தட்ட 45 Ford Ecosport கார்கள் காட்டப்படுகின்றன. இவை அனைத்தும் எந்தவொரு குறிப்பிட்ட டீலருக்கும் சொந்தமானவை கிடையாது. ஆரம்பத்தில் பார்க்கும்போது நாங்களும் அவ்வாறுதான் நினைத்தோம். ஆனால் இந்த 45 Ford Ecosport கார்களுக்கும் தனித்தனியாக உரிமையாளர்கள் உள்ளனர்.

டெல்லி, என்சிஆர் பகுதியில் இருந்து 'Ford Ecosport உரிமையாளர்கள்' பயணமாக தங்களது கார்களில் கான்வே போன்று வரிசையாக வந்தவர்கள், 45 கார்களையும் ஒன்றாக நிற்க வைத்து போட்டோ எடுப்பதற்காக வழியில் ஒரு கிராமத்திற்குள் சென்றுள்ளனர். இதெல்லாம் அவர்கள் முன்னரே திட்டமிட்டுதான் வந்துள்ளனர்.

கிராமத்திற்குள் செல்ல செல்ல ஒரு கட்டத்திற்கு மேல் தார் சாலை முடிந்து, மண் சாலையில் அவர்கள் செல்ல வேண்டி இருந்தது. இருப்பினும் எப்படியோ சமாளித்து தாங்கள் திட்டமிட்ட பகுதிக்கு மிக அருகில் சென்றுவிட்டவர்களுக்கு மிக பெரிய அதிர்ச்சியாக அவர்கள் சென்று கொண்டிருந்த மண் சாலையும் நிறைவு பெற்றுள்ளது.

சாலையின் இறுதியில் சுவர் ஒன்று எழுப்பப்பட்டு இருந்தது. இதனால் வேறு வழியில்லாமல் அந்த இடத்திலேயே கார்களை நிறுத்தி 10- 15 நிமிடங்கள் இளைப்பாற ஆரம்பித்துள்ளனர். அந்த நேரம் பார்த்து மழை பெய்ய, சில Ecosport கார்கள் அருகில் இருந்த திறந்தவெளி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.

முன்பு விவசாயம் பார்க்கப்பட்ட இடம் என்பதால், மழை பெய்ய துவங்கிய சில நிமிடங்களிலேயே அந்த பகுதி முழுவதும் சேறாக மாறியது. ஆதலால் சாலையில் இருந்து ஆஃப்-ரோட்டிற்கு சென்றவர்களால் மீண்டும் தங்களது Ecosport கார்களில் சாலைக்கு வர முடியவில்லை.

புற்களினால் கார்களின் முன்சக்கரங்கள் ஒரே இடத்தில் சுழன்றதால், வாகனத்தை முன்னோக்கி நகர்த்த முடியவில்லை. இந்த முயற்சிகள் ஒருபக்கம் நடைபெற்று கொண்டிருக்க, சில கார்களின் பின் சக்கரங்களும் மெல்ல மெல்ல மண்ணிற்குள் புதைய ஆரம்பித்தன. இதனால் முன்பு சில இன்ச்-களிலாவது முன்னோக்கி நகர்ந்த கார்கள் முற்றிலுமாக நகர முடியாமல் சேற்றில் சிக்கி கொண்டன.

இருப்பினும் இதில் ஒரு Ecosport காரில் ஓட்டுனர் எப்படியோ ரிவர்ஸில் கொண்டு வந்து மீண்டும் சாலையின் மீது வாகனத்தை ஏற்றிவிட்டார். மற்றவை எவ்வளவு முயற்சி செய்தும் நகரவில்லை. இதனால் அந்த பகுதியில் இருந்து டிராக்டர் பயன்படுத்துபவரை அழைக்க இந்த Ecosport உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.

டிராக்டர் வந்த பின்பும் எளிதில் சேற்றில் சிக்கி இருந்த கார்களை வெளியே எடுக்க முடியவில்லை. கார்களை இழுக்க பயன்படுத்தப்பட்ட கயிறு பல முறை அறுந்தது. அந்த அளவிற்கு முன் சக்கரங்கள் சேற்றில் சிக்கி இருந்தன. அதன்பின்பே சில கார்களை பின்பக்கத்தில் இருந்து இழுக்கும் முடிவிற்கு வந்தனர்.

இந்த முயற்சி சிறிது வெற்றியை கொடுத்தது. இருப்பினும் முன்சக்கர-ட்ரைவ் கொண்ட கார்களை மண் தரையில் இறக்கும் முன் ஒன்றிற்கு பல முறை யோசித்து கொள்ளுங்கள். அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பை கொண்ட வாகனம் என்றால் பிரச்சனையே இல்லை. ஏனெனில் இதில் வாகனத்தின் நான்கு சக்கரங்களுக்கும் என்ஜினின் ஆற்றல் வழங்கப்படும்.


Click it and Unblock the Notifications








