இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் எதுன்னு தெரியுமா? கெத்து காட்டும் டாடா தயாரிப்பு...
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான எலெக்ட்ரிக் காராக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி உருவெடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி பெற்றுள்ளது. இத்தனைக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை சரிந்துள்ளது. இருந்தாலும் சரி நிகரான போட்டியாளர்கள் இல்லாத காரணத்தால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி முதலிடத்தில் வீற்றுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாடா நிறுவனம் 500 நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 427 ஆக குறைந்துள்ளது. இது 14.6 சதவீத வீழ்ச்சியாகும். கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார்களின் பட்டியலில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி பிடித்துள்ளது.

எம்ஜி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 204 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளது. வரும் மாதங்களில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் மேம்படுத்தப்பட்ட 2021 இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை எம்ஜி மோட்டார் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

அத்துடன் டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து இந்தியா முழுவதும் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்களை அதிகளவில் கட்டமைக்கும் பணியிலும் எம்ஜி மோட்டார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி நேர் எதிர் போட்டியாளர் கிடையாது. இருந்தாலும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி சமீபத்தில் பின்னடைவு ஒன்றை சந்தித்துள்ளது. டெல்லி மாநில அரசு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

ஆனால் ரேஞ்ச் தொடர்பாக எழுந்த புகார் காரணமாக, மானியம் பெற தகுதியுடைய வாகனங்களின் பட்டியலில் இருந்து டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியை டெல்லி மாநில அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிலோ மீட்டர் பயணிக்கலாம் என டாடா நிறுவனம் கூறுகிறது. ஆனால் 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்ச் கிடைப்பது மிகவும் அரிதாகவே உள்ளது என புகார்தாரர் தெரிவித்திருந்தார். அத்துடன் இந்த பிரச்னையை சரி செய்ய டாடா டீலர்ஷிப்பிற்கு பலமுறை சென்றதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் இதன் காரணமாக எந்த பலனும் ஏற்படவில்லை என்பது அவரது குற்றச்சாட்டு. எனவே டெல்லி அரசுக்கு அவர் புகார் அனுப்பினார். இதன் தொடர்ச்சியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு டெல்லி அரசு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அளித்த பதிலில், 312 கிலோ மீட்டர் ரேஞ்ச் என்பது அராய் நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் மற்ற வாகனங்களை போலவே, டிரைவிங் ஸ்டைல், சாலைகள், ஏசி பயன்பாடு ஆகிய காரணங்களால் மைலேஜ் பாதிக்கப்படலாம் எனவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியது. ஆனால் இந்த பதிலால் டெல்லி அரசு திருப்தியடையவில்லை. எனவே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கான மானியத்தை அதிரடியாக ரத்து செய்து விட்டது.


Click it and Unblock the Notifications








