பெட்ரோல் பங்க்குகளில் டாடா செய்யப்போகும் நல்ல காரியம்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க!
பெட்ரோல் பங்க்குகளில் டாடா பவர் நிறுவனம் நல்ல காரியம் ஒன்றை செய்யவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாகன ஓட்டிகளின் கோரிக்கையும் நிறைவேறுவதாக தெரியவில்லை. ஏனெனில் வரிகள் மூலமாக கிடைக்கும் வருவாயை இழப்பதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தயாராக இல்லை.

இதனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது குறித்து வாகன ஓட்டிகள் பலரும் சிந்தித்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ரேஞ்ச் பற்றிய அச்சம் காரணமாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் வாகனங்களையே பயன்படுத்தியாக வேண்டிய சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் உள்ளனர்.

ஆனால் ரேஞ்ச் பற்றிய அச்சம் காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற தயங்கி வருபவர்களுக்கு நல்ல செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஆம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துடன் (HPCL), டாடா பவர் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஹெச்பிசிஎல் பங்க்குகளில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மற்றும் முக்கியமான நெடுஞ்சாலைகளில் உள்ள ஹெச்பிசில் பெட்ரோல் பங்க்குகளில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்காகதான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களை பொருத்துவதில் டாடா பவர் நிறுவனம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

100க்கும் மேற்பட்ட நகரங்களில் 500க்கும் மேற்பட்ட பொது சார்ஜிங் ஸ்டேஷன்களை டாடா பவர் நிறுவனம் அமைத்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், நெடுஞ்சாலைகள் என பல்வேறு இடங்களில் டாடா பவர் நிறுவனம் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைத்துள்ளது. இந்த வரிசையில் தற்போது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹெச்பிசிஎல் பெட்ரோல் பங்க்குகளில் அதிநவீன சார்ஜிங் கட்டமைப்பு வசதிகளை டாடா பவர் ஏற்படுத்தவுள்ளது. நகரங்களுக்கு உள்ளேயும், நகரங்களுக்கு இடையேயும் பயணம் செய்யும் எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு இந்த சார்ஜிங் கட்டமைப்பு வசதிகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டுமென்றால், சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் ரேஞ்ச் குறித்த அச்சம் இல்லாமல் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவார்கள். டாடா பவர்-ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் கூட்டணி, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதாக உள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இதில் ஒன்றாகும். டாடா பவர்-ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களின் கூட்டணி, அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் அமையும்.


Click it and Unblock the Notifications








