தென் கொரியாவில் மாடல் ஒய் எலெக்ட்ரிக் காரை களமிறக்கிய டெஸ்லா... இந்தியர்களும் எதிர்பார்க்கலாம்...
தென் கொரியாவில் டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, தனது மாடல் ஒய் (Model Y) காம்பேக்ட் எஸ்யூவி காரை தென் கொரியாவில் இன்று (பிப்ரவரி 12) விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தென் கொரியாவில் கார் விற்பனையை அதிகரிக்க டெஸ்லா முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாடல் ஒய் காம்பேக்ட் எஸ்யூவியை அங்கு டெஸ்லா களமிறக்கியுள்ளது.

தென் கொரியாவில் டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் கார் மொத்தம் 3 வேரியண்ட்களில் கிடைக்கும். இதில், ஸ்டாண்டர்டு ரேஞ்ச் பேஸ் வேரியண்ட்டாக இருக்கும். இதன் விலை 59.99 மில்லியன் வானில் இருந்து தொடங்குகிறது. வான் தென் கொரிய கரன்ஸியாகும். இதுதவிர லாங் ரேஞ்ச் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் ஆகிய வேரியண்ட்களும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதில், லாங் ரேஞ்ச் வேரியண்ட்டின் விலை 69.99 மில்லியன் வான் ஆகவும், பெர்ஃபார்மென்ஸ் வேரியண்ட்டின் விலை 79.99 மில்லியன் வான் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தென் கொரியாவில் நடப்பாண்டு முதல் 60 மில்லியன் வானுக்கும் குறைவான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார்களுக்கு அரசின் மானிய தொகை முழுமையாக வழங்கப்படுகிறது.

எனவே டெஸ்லா மாடல் ஒய் எலெக்ட்ரிக் காரின் ஸ்டாண்டர்டு ரேஞ்ச் வேரியண்ட்டை வாங்கும் நபர்களுக்கு மட்டுமே அரசின் மானிய தொகை முழுமையாக கிடைக்கும். அதே நேரத்தில் லாங் ரேஞ்ச் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் வேரியண்ட்களை வாங்குபவர்களுக்கு அரசின் மானிய தொகையில் பாதிதான் கிடைக்கும்.

டெஸ்லா நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாடல் 3 எலெக்ட்ரிக் காரை தென் கொரியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. அதன்பின் தென் கொரியாவில் டெஸ்லா விற்பனைக்கு அறிமுகம் செய்த புதிய வாகனமாக மாடல் ஒய் உள்ளது. அத்துடன் மாடல் ஒய் எலெக்ட்ரிக் கார்தான், சுமாராக கடந்த மூன்று ஆண்டுகளில் தென் கொரியாவில் டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்த முதல் எஸ்யூவி காராகும்.

முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு மாடல் எக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை டெஸ்லா நிறுவனம் தென் கொரியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. தென் கொரியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவிற்கு இன்னும் டெஸ்லா வரவில்லை.

டெஸ்லாவின் இந்திய வருகையை இந்திய வாடிக்கையாளர்கள் பெரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்து கொண்டுள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பு நடப்பாண்டு நிறைவேற போகிறது. ஆம், டெஸ்லா நிறுவனம் நடப்பாண்டில் இந்திய சந்தையிலும் தனது எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை தொடங்குவது உறுதியாகியுள்ளது.

இந்திய சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் முதல் காராக மாடல் 3 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து மாடல் ஒய் எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்தால், இங்கேயே கார்களை உற்பத்தி செய்வதற்கும் டெஸ்லா திட்டமிட்டுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications