டெஸ்லாவிற்கு 1,000 ஏக்கர் நிலங்களை வழங்கியுள்ளதா குஜராத் அரசு? வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!!
டெஸ்லா நிறுவனத்திற்கு 1,000 ஏக்கர் நிலங்களை வழங்க குஜராத் அரசாங்கம் தயாராக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் டெஸ்லா நிறுவனம் அதன் இந்திய தலைமையகத்தை அமைக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதேநேரம் பெங்களூர் உள்பட மும்பை, டெல்லி என வெவ்வேறான நகரங்களில் டீலர்ஷிப் ஷோரூம்களை நிறுவவும் இந்த எலக்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

அடுத்து என்ன தொழிற்சாலையை கட்டமைப்பதற்கு தேவையான இடம் தான். அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லாவை தங்களது மாநிலத்திற்கு கொண்டுவர கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது, டெஸ்லா நிறுவனம் லோக்கல் தொழிற்சாலை பணிகளை மேற்கொள்வதற்காக 1,000 ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளது என குஜராத் அரசாங்கத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திதளத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

Source: Indian Express
இந்த செய்தியில், அந்த குஜராத் அரசாங்க மூத்த நிர்வாகி, "அவர்கள் (டெஸ்லா) தொலைவில் உள்ள குஜராத்திற்கு வர வேண்டுமா அல்லது பெங்களூரிலேயே ஆழமாக கால் பதிக்கலாமா என்பதில் இன்னும் தீர்மானமாக இல்லை.

அவர்கள் குஜராத்தில் பெங்களூருக்கு இணையான சமூக வாழ்க்கை இல்லை என நினைக்கின்றனர். மேலும், அவர்கள் குஜராத் மற்றும் கர்நாடக அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகின்றனர்" என கூறியதாக பதிவிட்டுள்ளனர்.

இந்த அமெரிக்க இவி பிராண்ட் கடந்த 2021 ஜனவரி 8ஆம் தேதி தன்னை டெஸ்லா இந்தியா மோட்டார்ஸ் & எனர்ஜி பிரைவேட் லிமிடெட் என பெங்களூரில் பதிவு செய்து கொண்டதன் மூலம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக கால்பதித்தது.

ஏற்கனவே கூறியதுதான், குஜராத் மட்டுமின்றி மஹாராஷ்டிரா அரசாங்கமும் டெஸ்லாவை தங்களது மாநிலத்தின் பக்கம் இழுக்க விருப்பப்படுகிறது. இதற்காக மஹாராஷ்டிரா அரசாங்கமும் தங்களது மாநிலத்தில் டெஸ்லாவிற்கு நிலத்தை வழங்க தயாராக உள்ளதாக முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இருப்பினும் மஹாராஷ்டிரா அரசாங்கத்துடனான டெஸ்லாவின் பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ஏனெனில் டெஸ்லா நிர்வாகிகள் மும்பை பெருநகர மண்டலத்தில் மிக பெரிய சார்ஜிங் நிலையங்களை கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

அதில் ஒன்று கார்களை கப்பலில் இருந்து இறக்குமதி செய்ய ஏதுவாக ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் நிறுவ அனுமதியளிக்க டெஸ்லா மஹாராஷ்டிரா அரசாங்கத்தை கேட்டு வருகிறது. இந்தியாவில் டெஸ்லா கூட்டணி வைத்துள்ள 27 விற்பனையாளர்களில் கிட்டத்தட்ட 20 பேர் மஹாராஷ்டிராவில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








