இன்னும் மின்சார வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வராத நிறுவனங்கள்! பலமடங்கு வரவேற்பு இருந்தும் தயக்கம் காட்டுறாங்க
இந்தியாவில் பல மடங்கு வரவேற்பைப் பெற்று வருகின்ற போதிலும் சில முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வராமல் இருக்கின்றன. அந்தவகையில் எந்தெந்த நிறுவனங்கள் மின் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வராமல் இருக்கின்றன என்பது பற்றிய தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்திய வாகன உலகில் தங்களுக்கு என மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கின்ற போதிலும் சில நிறுவனங்கள் மின்சார வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வராமல் இருக்கின்றன. முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், எம்ஜி, மஹிந்திரா மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே இந்த பிரிவில் தங்களின் தயாரிப்பை விற்பனைக்குக் கொண்டு வந்துவிட்டன.

இதேபோல, சொகுசு கார்களை விற்பனைக்கு வழங்கி வரும் ஆடி, பிஎம்டபிள்யூ, மினி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள்கூட அவற்றின் மின் வாகன தயாரிப்புகளை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால் இன்னமும் மாருதி சுசுகி போன்ற முன்னணி நிறுவனங்கள் சில எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வராமல் சாக்கு-போக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்று இன்னும் எந்தெந்த நிறுவனங்கள் நாட்டில் மின் வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வராமல் இருக்கின்றன?, அதற்கு அவை கூறும் காரணங்கள் என்ன?, என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுசுகி (Maruti Suzuki)
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி இன்னும் நாட்டில் மின்சார வாகனத்தை விற்பனக்குக் கொண்டு வராதது இந்திய வாகன பிரியர்களை வேதனையில் ஆழ்த்தும் விஷயங்களில் ஒன்றாக இருக்கின்றது. நிறுவனம் விரைவில் வேகன்ஆர் அடிப்படையிலான எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் அறிமுகம் எப்போதும் அரங்கேறும் என்றே தெரியாத நிலையே தற்போது நிலவுகின்றது.

அதேநேரத்தில், 50 யூனிட் வேகன்ஆர் மின்சார கார்களை உற்பத்தி செய்து நிறுவனம் அதனை சோதனைக்கு உட்படுத்தி வருகின்றது. நாட்டில் மின் வாகனங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினாலும், மக்கள் மத்தியில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்காததையும் காரணம் காட்டி மாருதி அதன் மின் வாகன அறிமுகத்தை தள்ளிப்போட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா (Toyota)
ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் டொயோட்டா, இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனத்தைக் களமிறக்க தயக்கம் காட்டும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கின்றது. இந்நிறுவனம் ஹைபிரிட் மற்றும் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் ரக வாகனங்களை உலகளவில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. ஆனால், இந்தியாவில் நிறுவனம் இதுமாதிரியான வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர தயக்கம் காட்டி வருகின்றது.

கியா (Kia)
விற்பனைக்கு வந்த ஒரு சில ஆண்டுகளிலேயே நாட்டு மக்களை வெகுவாக கவர்ந்த தயாரிப்பாக கியாவின் வாகனங்கள் இருக்கின்றன. இந்நிறுவனம் உலகளவில் அதன் மின் வாகன தயாரிப்புகளை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. நிறுவனத்தின் இவி6 எலெக்ட்ரிக் காருக்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்தியாவிலும் இந்நிறுவனத்தின் மின் வாகன தயாரிப்புகளுக்கு பல மடங்கு எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. இருப்பினும், நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை.

மேலே பார்த்த அனைத்த நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் இந்தியாவில் பல மடங்கு அதிக வரவேற்பு நிலவி வருகின்றது. ஆனால், இந்நிறுவனங்கள் இந்தியாவில் நிலவும் சில காரணங்களைக் காட்டி எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய திட்டத்தை தள்ளிப் போட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications








