எலெக்ட்ரிக் வாகனங்களை பற்றி உலா வரும் தாறுமாறான கட்டுக்கதைகள்... உண்மை என்னனு தெரிஞ்சுகோங்க...
எலெக்ட்ரிக் வாகனங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள் குறித்தும், அவற்றின் உண்மைதன்மை குறித்தும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தற்போது வேகமாக மாறி வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவு என்பது அவற்றின் முக்கியமான சிறப்பம்சமாக உள்ளது.

எனினும் மற்ற புதிய தொழில்நுட்பங்களை போலவே, எலெக்ட்ரிக் வாகனங்களை பற்றியும் ஏராளமான கட்டுக்கதைகள் உலா வந்து கொண்டுள்ளன. எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையில் இந்த கட்டுக்கதைகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள் குறித்தும், அவற்றின் உண்மைதன்மை குறித்தும் இந்த செய்தியில் விளக்கமாக பார்க்கலாம்.

1. எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்ய பல மணி நேரம் ஆகும்
எலெக்ட்ரிக் வாகனங்களை மாறுவது குறித்து யோசிக்கும் ஒருவரை தொற்றி கொள்ளும் முதன்மையான கவலை இதுதான். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு சில நிமிடங்களில் எரிபொருள் நிரப்பி விடலாம். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு பல மணி நேரம் ஆகும் என பலர் நினைக்கின்றனர். இதில், சற்று உண்மை இருக்கிறது என்பதை மறுக்க முடியாதுதான்.

ஆனால் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை மிக வேகமாக சார்ஜ் செய்து விட முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது உள்ள சூப்பர் சார்ஜர்கள் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை 30 முதல் 60 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உதாரணத்திற்கு எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், அதன் இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை வெறும் 50 நிமிடங்களில், 0-80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கு நிச்சயமாக பல மணி நேரம் ஆகும் என்பதில் முழுமையாக உண்மை இல்லை.

சாதாரண சார்ஜர்களை பயன்படுத்தும்போதுதான், சார்ஜ் செய்வதற்கு மிகவும் நீண்ட நேரம் ஆகும். அதே சமயம் எலெக்ட்ரிக் வாகனங்களை வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பதால், பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் நிரப்புவதற்கு நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் தற்போதைய நிலையில் சார்ஜிங் ஸ்டேஷன் பெரிய அளவில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் தேசிய நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைப்புகளை அதிகரிக்கும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. சார்ஜிங் ஸ்டேஷன் கட்டமைப்புகள் அதிகரிக்கப்பட்ட பின்பு, எலெக்ட்ரிக் வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பது என்பது இன்னும் எளிமையாகி விடும்.

2. எலெக்ட்ரிக் வாகனங்கள் தொலைதூர பயணங்களுக்கு ஏற்றவை அல்ல
தொலை தூர பயணங்களை மேற்கொள்வதற்கு ஏற்றவை அல்ல என்ற கட்டுக்கதையால்தான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் தற்போது உள்ள தொழில்நுட்பங்களின் மூலம், எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தாலே, 300 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தொலைவு பயணம் செய்வது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

உதாரணத்திற்கு எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 340 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும். எனவே எலெக்ட்ரிக் வாகனங்கள் தொலை தூர பயணங்களுக்கு ஏற்றவை கிடையாது என்ற வாதத்தில் உண்மையில்லை. சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இந்த விஷயத்தில் மக்களின் நம்பிக்கை இன்னும் உயரும்.

3. எலெக்ட்ரிக் வாகனங்கள் சிக்கனமானவை கிடையாது
பொதுவாக பெட்ரோல், டீசல் வாகனங்களின் விலையுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று அதிகம் என்பதில் உண்மை இருக்கவே செய்கிறது. ஆனால் எந்தவொரு புதிய தொழில்நுட்பம் என்றாலும், அதன் விலை சற்று அதிகமாக இருக்கவே செய்யும். எனினும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை குறைவதற்கான சூழல் தற்போது உருவாகி வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் சாலை வரி, பதிவு கட்டணங்களில் இருந்து விலக்கு மற்றும் மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையை குறைப்பதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பராமரிப்பு செலவு மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

4. எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரி மிகவும் விலை உயர்ந்தவை மற்றும் அவற்றை அடிக்க மாற்ற வேண்டும்
எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயான் பேட்டரிகளின் விலை வேகமாக குறைந்து வருகிறது. அதேபோல் எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரி 10-20 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்க கூடியது. அதன்பின் அவற்றை மாற்றினால் போதுமானது. அத்துடன் எலெக்ட்ரிக் கார்களின் பேட்டரிகளுக்கு சில நிறுவனங்கள் 8 ஆண்டுகள் வரை உத்தரவாதம் வழங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








