சிஎன்ஜி வாகனங்களுக்கு பின்னால் இவ்ளோ சிக்கல்கள் இருக்குதா? நல்ல வேல இப்பவே தெரிஞ்சிடுச்சு!!
சிஎன்ஜி வாகனங்கள் பயன்படுத்துவதில் கணிசமான சிக்கல்கள் இருக்கின்றன. அவை என்ன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அடுத்தபடியாக சிஎன்ஜி வாகன பயன்பாட்டை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. இது பெட்ரோல், டீசல் வாகனங்களைக் காட்டிலும் குறைந்த மாசுபாட்டை வெளிப்படுத்தக் கூடியவை என்ற ஒற்றை காரணமே இதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான காரணம் ஆகும்.

இதுமட்டுமின்றி நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வரும் பெட்ரோல், டீசல் எரிபொருள்களின் விலையுயர்வில் இருந்து நமது பாக்கெட்டுகளைக் காப்பாற்றிக் கொள்ளவும் சிஎன்ஜி வாகனங்கள் உதவியாக இருக்கின்றன. தற்போது, பெட்ரோல், டீசல் விலை ரூ. 100 தொட இருக்கின்றது.

ஆனால், சிஎன்ஜியோ கிலோ ஒன்று ரூ. 35.44க்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதுவும் மக்கள் சிஎன்ஜி வாகனங்களின் பக்கம் சாய முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆனால், சிஎன்ஜி வாகனங்கள் பயன்படுத்துவதில் கணிசமான பிரச்னைகள் இருக்கின்றன. அவை என்ன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

பூட் ஸ்பேஸைக் குறைக்கும்:
கார்களில் நாம் சௌகரியமாக அமர்ந்து செல்வதற்கு இருக்கைகளுக்கு இடையில் எப்படி அதிக இட வசதி தேவைப்படுகின்றதோ, அதோபோன்று, அதிக பொருட்களை ஏற்ற செல்ல அதிக பூட் ஸ்பேஸ் வாகனங்கள் தேவைப்படுகின்றது.

அதிக பூட் ஸ்பேஸ் இருந்தால் மட்டுமே நீண்ட தூர பயணங்களுக்கான அதிக பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். ஆனால், சிஎன்ஜி தேர்வு கொண்ட வாகனங்களில் பூட் ஸ்பேஸ் மிக மிக குறைவாகிவிடுகின்றது. ஆம், சிஎன்ஜி வாயுவை நிரப்புவதற்கான சிலிண்டர்கள் காரின் பூட் பகுதியிலேயே நிலை நிறுத்தப்படுகின்றன.

இதன் விளைவு அதிக இடம் அதுவே பிடித்துக் கொள்கின்றது. ஆகையால், பின் பகுதியில் பொருட்களை ஏற்றி செல்ல இடமில்லாத நிலை நிலவுகின்றது. ஆகையால், பொருட்களை அதிகளவில் ஏற்றுவதிலும் சிக்கல் ஏற்படுகின்றது. இதுவே, சிஎன்ஜி வாகனத்தில் இருக்கும் மிகப் பெரிய சிக்கலாக உள்ளது.

எஞ்ஜின் திறன் குறையும்:
சிஎன்ஜி வாயுக்கு இயங்கும் வகையில் எஞ்ஜினில் மாற்றம் செய்வதனால் எஞ்ஜின் திறன் லேசாக குறைகின்றது. ஆரம்ப பிக்-அப் மிகக் கடுமையாக குறைவதாக சிஎன்ஜி வாகன பயனர்கள் கூறுகின்றனர். அதுவே, அதே கார் பெட்ரோலில் இயங்கும்போது அதிக திறனுடன் செயல்படுவதாகவும் பயனர்கள் தெரிவிக்கின்றனர். இதுவும், சிஎன்ஜி கார்களில் இருக்கும் மிகப்பெரிய சிக்கலாக இருக்கின்றது.

மறு விற்பனை மதிப்பு மிக குறைவு:
இந்தியர்கள் பலர் அதிக கவனம் செலுத்தக் கூடிய விஷயமே, மறு விற்பனையின்போது தங்களின் வாகனம் அதிக மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இந்த விஷயத்தில் சிஎன்ஜி வாகனங்கள் கோட்டை விடும் வாகனங்களாக இருக்கின்றன.

ஆமாங்க, சந்தையில் சிஎன்ஜி தேர்வுள்ள வாகனங்களுக்கு மறு விற்பனையின்போது குறைந்த மதிப்பே கிடைக்கின்றது. குறிப்பாக, சந்தைக்கு பிறகான சிஎன்ஜி கிட்டால் உங்கள் வாகனத்தை மாற்றியிருக்கின்றீர்கள் என்றால் பல மடங்கு குறைந்த மதிப்பிலேயே அந்த கார் மறு விற்பனைக்கும் போகும் என்கின்றனர் வாகனத்துறை வல்லுநர்கள்.

ரொம்ப நேரம் காத்திருக்கணும்:
தற்போது சிஎன்ஜி எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மிகக் குறைந்த அளவிலேயே நாட்டில் பயன்பாட்டில் இருக்கின்றன. ஆகையால், சிஎன்ஜி நிரப்பும் நிலையங்களில் எப்போதும் வாகனங்கள் நிறைந்தே காணப்படுகின்றது. எனவே, சிஎன்ஜியை நிரப்ப வேண்டுமானால் சில நேரங்கள் வரிசையில் நின்று நிரப்ப வேண்டும் என்ற நிலை நிலவுகின்றது. இது சிஎன்ஜி வாகன பயனர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்றாகும்.

அடிக்கடி சர்வீஸ் இடைவெளி தேவைப்படும்:
உங்கள் கார் சிஎன்ஜிக்கு மாற்றப்பட்டிருந்தால் காரின் சர்வீஸ் விஷயத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். சிஎன்ஜியால் எஞ்ஜின் இயங்குவதால் எஞ்ஜின் உலர்ந்தநிலையில் தென்படும். இதன் விளைவாக ஸ்பார்க் பிளக் மற்றும் எஞ்ஜின் ஆயிலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனை அவ்வப்போது கவனிக்கவில்லை என்றால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். எனவேதான் சிஎன்ஜி கார்களுக்கு அடிக்கடி சர்வீஸ் தேவைப்படுகின்றது.

ஹைட்ரோ பரிசோதனை:
சிஎன்ஜி சிலிண்டரை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஹைட்ரோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இது கட்டாயமாகும். அதாவது, வாகனத்தில் இருக்கும் சிஎன்ஜி நிரப்பும் சிலிண்டர் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவும் இந்த வாகனங்களில் இருக்கக் கூடிய மிகப்பெரிய சிக்கலாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








