டொயோட்டா பிராண்டின் முதல் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார்!! பி.இசட்4எக்ஸ் என்ற பெயரில் வெளியீடு!
உலகளவில் பிரபலமான கார் பிராண்டான டொயோட்டாவின் முதல் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார் பி.இசட்4எக்ஸ் என்ற பெயரில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய டொயோட்டா எலக்ட்ரிக் காரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஜப்பானிய டொயோட்டா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் கார்களை பி.இசட் வரிசையில் எதிர்காலத்தில் கொண்டுவர உள்ளது. இதன் முதற்கட்டமாகவே பி.இசட்4எக்ஸ் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி கார் தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பி.இசட் (bZ) என்பது beyond Zero (பூஜ்ஜியத்திற்கு அப்பால்) என்பதன் சுருக்கமாகும்.

இது டொயோட்டா நிறுவனத்தின் கார்பன் நடுநிலையை குறிக்கிறது. பி.இசட் வரிசையை வெளியீடு செய்திருக்கும் இந்த நிறுவனம் அதன் எலக்ட்ரிக் கார்களை முக்கிய இவி-களுக்கு அதிக தேவை உள்ள சீனா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் முதலாவதாக விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

பி.இசட்4எக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டுள்ள இவி ப்ளாட்ஃபாரத்தை சுபாரு கார்பிரேஷன் உடன் இணைந்து டொயோட்டா உருவாக்கியுள்ளது. இந்த ப்ளாட்ஃபாரம் ஆனது ஆஃப்-ரோடு திறன்களுடன் எலக்ட்ரிக் எஸ்யூவி காரினை வடிவமைக்க உகந்த ப்ளாட்ஃபாரம் என தெரிவிக்கப்படுகிறது.

க்ரூஸிங் வரம்பை, குறிப்பாக குளிர்கால அமைப்புகளில் மற்றும் உயர்தர பேட்டரி திறன் தக்கவைப்பு விகிதத்தில் இலக்காக கொண்டு, பல ஆண்டுகளாக பாதுகாப்பாகவும் வசதியாகவும் இயக்கக்கூடிய பேட்டரி மின்சார வாகனங்களை (BEV) உருவாக்க விரும்புவதாக டொயோட்டா தெரிவித்துள்ளது. புதிய பி.இசட்4எக்ஸ் இவி-யில் 71.4 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி காரினை முன்-சக்கர-ட்ரைவ் மற்றும் அனைத்து-சக்கர-ட்ரைவ் தேர்வுகளில் கொண்டுவர டொயோட்டா தயாராகி வருகிறது. இதில் முன்-சக்கர-ட்ரைவ் வெர்சனில் ஏறக்குறைய 500கிமீ ரேஞ்சையும், அனைத்து-சக்கர-ட்ரைவ் வெர்சனில் 460கிமீ ரேஞ்சையும் எதிர்பார்க்கிறோம். இந்த வேறுப்பாட்டிற்கு காரணம் முன்-சக்கர-ட்ரைவ் வெர்சனில் 150 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட உள்ளது.

அதுவே அனைத்து-சக்கர-ட்ரைவ் வெர்சனில் இரு முனைகளிலும் தலா ஒன்று என இரு 80 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட உள்ளன. மேலும், அதிக-வெளியீட்டை வழங்கக்கூடிய சார்ஜர்களை பொருத்தவுள்ளதாகவும் டொயோட்டா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 150 கிலோவாட்ஸ் என்ற அளவில் செயல்திறன்மிக்க சார்ஜராக கொண்டுவரப்படும் இதன் மூலம் வெறும் 30 நிமிடங்களில் 80% சார்ஜை நிரப்பிவிடலாமாம்.

புதிய டொயோட்டா பி.இசட்4எக்ஸ் இவி ஆனது நடுத்தர-அளவு எஸ்யூவி மாடலாகும். டொயோட்டாவின் இத்தனை ஆண்டுகால அனுபவங்களுடன் மிகவும் மாடர்னாக மற்றும் செதுக்கப்பட்ட டிசைனில் இதன் வெளிப்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் வழக்கமான வடிவிலான ஸ்டேரிங் சக்கரத்துடன் இறக்கை-வடிவ ஸ்டேரிங் சக்கர தேர்வும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்டேரிங்-பை-வயர் சிஸ்டத்துடன் இறக்கை-வடிவ ஸ்டேரிங் சக்கரம் செயல்படுமாம். இந்த ரைடு-பை-வயர் அமைப்பினை டொயோட்டா நிறுவனம் ஒன்-மோஷன் க்ரிப் என அழைக்கிறது. இத்தகைய ஸ்டேரிங் சக்கரம் ஓட்டுனருக்கு கூடுதல் லெக் ரூமை க்ரியேட் செய்வது மட்டுமின்றி, ட்ரைவிங் நிலைபாட்டை மேம்படுத்தும் மற்றும் காருக்குள் நுழைவதையும், வெளியேறுவதையும் எளிமையாக்கும் என தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது.

சிறந்த ஸ்டேரிங் அனுபவத்துடன், ட்ரைவ் மோட்களின் மூலம் ஸ்டேரிங்கின் பண்பை மாற்றி கொள்ளும் வசதியினையும் ஒன்-மோஷன் க்ரிப் வழங்கும் என டொயோட்டா தெரிவித்துள்ளது. புதிய பி.இசட்4எக்ஸ் இவி-ஐ அறிமுகப்படுத்தி இருப்பதன் மூலம் ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டொயோட்டா உலகளவில் மின்மயமாக்கப்பட்ட வாகன சந்தையில் நுழைந்துள்ளது.

இவி-கள் தயாரிப்பில் முனைப்புடன் செயல்பட திட்டங்களை வகுத்துள்ள டொயோட்டா 2025ஆம் ஆண்டிற்குள் பி.இசட் வரிசையில் மொத்தம் 7 மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சர்வதேச சந்தைகளில் டொயோட்டா பி.இசட்.4எக்ஸ் இவி அடுத்த 2022ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இந்திய சந்தையில் முதல் டொயோட்டா எலக்ட்ரிக் கார் அறிமுகப்படுத்தப்படுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். ஏனெனில் தற்சமயம் இந்தியாவில் முடிந்த வரையில் சுஸுகி கார்களின் ரீபேட்ஜ்டு வெர்சன்களை அறிமுகப்படுத்தவே டொயோட்டா முயற்சித்து வருகிறது. விற்பனையில் உள்ள சுஸுகி கார்களின் அடிப்படையில், சில மாற்றங்களுடன் டொயோட்டா நிறுவனத்தின் லோகோ உடன் வடிவமைக்கப்படும் கார்களையே ரீபேட்ஜ்டு டொயோட்டா கார்கள் என்கிறோம்.

இந்த வகையில் டொயோட்டா க்ளான்ஸா (மாருதி சுஸுகி பலேனோ), அர்பன் க்ரூஸர் (விட்டாரா பிரெஸ்ஸா) கார்கள் ஏற்கனவே இந்தியாவில் விற்பனையில் இருக்க, மாருதி சுஸுகி எர்டிகா மாடலின் அடிப்படையிலான ரூமியன் என்ற எம்பிவி காரை அடுத்தாக நம் நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்த டொயோட்டா தயாராகி வருகிறது.


Click it and Unblock the Notifications








