கரொல்லா காரை மீண்டும் களமிறக்குகிறது டொயோட்டா... ஸ்கோடா ஆக்டேவியா காருக்கு செக் வைக்க திட்டம்!
டொயோட்டா கரொல்லா கார் மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. இதற்காக பெயர் பதிவும் செய்யப்பட்டு இருப்பதுடன், போட்டியாளர்களை ஒரு கை பார்க்கும் விதத்தில், ஹைப்ரிட் நுட்பத்தில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எக்ஸிகியூட்டிவ் செடான் கார் மார்க்கெட்டில் டொயோட்டா கரொல்லா கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வந்தது. கடந்த 2000ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை இந்த கார் விற்பனையில் வைக்கப்பட்டு இருந்தது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, விற்பனை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான அம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் பல மாறுதல்களுடன் புதிய டொயோட்டா கரொல்லா கார் இந்தியாவில் மீண்டும் களமிறக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

கரொல்லா க்வெஸ்ட் என்ற பெயரை இந்தியாவில் டிரேட்மார்க் பதிவு செய்துள்ளது டொயோட்டா நிறுவனம். வெளிநாடுகளில் கரொல்லா க்வெஸ்ட் என்ற பெயரில்தான் புதிய மாடல் விற்பனையில் உள்ளது. எனவே, இந்த மாடல் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்பது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே கரொல்லா ஆல்டிஸ் என்று அழைக்கப்பட்ட நிலையில், இனி கரொல்லா க்வெஸ்ட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செடான் கார்களுக்கான வரவேற்பு குறைந்துள்ள நிலையில், நம்பிக்கையுடன் மீண்டும் கரொல்லா காரை களமிறக்க டொயோட்டா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்தியாவில் விற்பனையில் இருந்த டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் பிஎஸ்-4 மாடலில் 87 பிஎச்பி பவரையும், 205 என்எம் டார்க் திறனையும் வழங்கும் .4 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் மற்றும் 138 பிஎச்பி பவரையும், 173 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட்டன. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைத்து.

இதே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன்தான் இப்போது வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இந்த எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் இந்தியாவிலும் தக்க வைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதேநேரத்தில், இந்தியாவில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டொயோட்டா கரொல்லா க்வெஸ்ட் காரில் புதிய க்ரில் அமைப்பு, ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் வலிமையான பம்பர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. புதிய பம்பர் மற்றும் டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.

உட்புறத்திலும் அதிக மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி, க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், பின்புறத்தில் சாய்மான வசதி கொண்ட இருக்கைகள், ரிவர்ஸ் கேமரா என ஏராளமான வசதிகள் உள்ளன.

அடுத்த வாரம் புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு கடும் போட்டியை தரவல்ல டொயோட்டா கரொல்லா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் எக்ஸிகியூட்டிவ் செடான் கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications








