டொயோட்டா கார்களுக்கு 'ப்ரீ-பெய்டு' சர்வீஸ் திட்டம் அறிமுகம்!
வாடிக்கையாளர்களுக்கு கார் பராமரிப்பு செலவீனத்தில் சேமிப்பை வழங்கும் வகையில், 'ப்ரீ-பெய்டு- சர்வீஸ் பேக்கேஜை டொயோட்டா கார் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டொயோட்டா நிறுவனத்தின் கார்களுக்கான இந்த புதிய சர்வீஸ் கட்டண திட்டத்திற்கு ஸ்மைல் ப்ளஸ் என்ற பெயரில் குறிப்பிப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக டொயோட்டா கார் உரிமையாளர்கள் பராமரிப்பு செலவீனத்தில் குறிப்பிடத்தக்க சேமிப்பையும், நிம்மதியான உணர்வையும் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது வசதிக்கும், விருப்பத்திற்கும் தக்கவாறு ஸ்மைல் ப்ளஸ் பேக்கேஜை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டொயோட்டா டீலர்கள் மற்றும் சர்வீஸ் சென்டர்களில் இந்த திட்டத்திற்கு பதிவு செய்து கொள்ளலாம்.

'ஸ்மைல் ப்ளஸ்' பேக்கேஜை தேர்வு செய்து கொண்டார், எதிர்காலத்தில் சர்வீஸ் கட்டணம் உயர்ந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. தற்போது குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்திலேயே சர்வீஸ் செய்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்கவாறு தேர்வு செய்து கொள்ளும் வித்ததில், ஸ்மைல் ப்ளஸ் பேக்கேஜில் நான்கு விதமான திட்டங்கள் கொடுக்கப்பட உள்ளன. எசென்சியல், சூப்பர் ஹெல்த், சூப்பர் டார்க் மற்றும் அல்ட்ரா ஆகிய பெயர்களில் இந்த திட்டங்கள் வழங்கப்படும்.

குறிப்பிட்ட இடைவெளியில் கார்களை சர்வீஸ் செய்வதற்கான வாய்ப்பு, பொதுவான பழுது நீக்கு பணிகள் உள்ளிட்ட பல பராமரிப்பு சேவைகளை உள்ளடக்கியதாக இந்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த திட்டத்தின் கீழ் ஒரிஜினல் உதிரிபாகங்கள் மட்டுமே பயன்படுத்தி சர்வீஸ் செய்து தரப்படும் என்பதும் முக்கிய விஷயமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் க்ளான்ஸா, யாரிஸ், இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர், கேம்ரி, அர்பன் க்ரூஸர் மற்றும் வெல்ஃபயர் ஆகிய கார்களை டொயோட்டா விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு இந்த முன்கூட்டியே கட்டணம் செலுத்தி பராமரிப்பு சேவைகளை பெறுவதற்கான வாய்ப்பு கூடுதல் சேமிப்பை வழங்கும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








