பெங்களூர் கார் ஆலையை 3 வாரங்கள் மூடுகிறது டொயோட்டா... ஏமாற்றத்தில் வாடிக்கையாளர்கள்!
பராமரிப்புப் பணிகளுக்காக பெங்களூர் அருகே செயல்பட்டு டொயோட்டா கார் ஆலை மூன்று வாரங்களுக்கு மூடப்பட உள்ளது. இதனால், அந்நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்களின் டெலிவிரிப் பணிகளில் சற்று தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது.

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூர் அருகே பிடதியில் டொயோட்டா நிறுவனத்தின் கார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்புப் பணிகள் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், வரும் 26ந் தேதி முதல் மே 14ந் தேதி வரை கார் ஆலையில் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட உள்ளது. ஆலையில் உள்ள எந்திரங்கள் உள்ளிட்டவற்றிற்கான வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

ஆலையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது கொரோனாவுக்காக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொரோனா பரவலை தவிர்க்கும் முயற்சிகளும் கடைபிடிக்கப்படும்.

கார் ஆலை மூடப்படுவதால் இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் உள்ளிட்ட முன்னணி மாடல்களின் உற்பத்தி மூன்று வாரங்களுக்கு இருக்காது. எனவே, இருப்பு உள்ள கார்கள் டெலிவிரி கொடுக்கப்படும் என்று தெரிகிறது. அண்மையில் புக்கிங் செய்தவர்கள், புதிதாக புக்கிங் செய்பவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

அதேநேரத்தில், இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் கார்கள் மற்றும் மாருதி நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படும் டொயோட்டா க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் எஸ்யூவி கார்களின் டெலிவிரிப் பணிகளில் எந்த பிரச்னையும் இருக்காது.

கொரோனா பரவல் காரணமாக, டாடா, மஹிந்திரா நிறுவனங்களின் கார் ஆலைகளில் உற்பத்தி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் மட்டும் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது ஆலைகளை தற்காலிகமாக மூடி வைத்துள்ளது. அதேபாணியில், டொயோட்டா நிறுவனமும் கொரோனா பரவலை கருத்தில்கொண்டு ஆலைகளை தற்காலிகமாக மூடி வைக்க முடிவு செய்துள்ளது. இந்த சமயத்தில் பராமரிப்புப் பணிகளை முடித்து விடுவதற்கும் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








