தெலுங்கானாவில் ரூ.2,100 கோடி முதலீடு செய்யும் அமெரிக்க இவி நிறுவனம்!! புது தொழிற்சாலை உருவாகிறது
ட்ரைடன் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில், தெலுங்கானாவில் ரூ.2,100 கோடியில் தொழிற்சாலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ட்ரைடனின் இந்த முதலீடு குறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அமெரிக்க சூரிய மின்கல தயாரிப்பு நிறுவனமான ட்ரைடன் சோலாரின் துணை நிறுவனமான ட்ரைடன் இவி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தெலுங்கானாவில் தேசிய முதலீட்டு மற்றும் உற்பத்தி மண்டலமாக உள்ள ஜஹீராபாத்தில் தனது தொழிற்சாலையை நிறுவவுள்ளது.

ட்ரைடன் நிறுவனத்தின் இந்திய பிரிவு மேம்பாட்டுத்துறை முதன்மை ஆணையரான என் மன்சூரின் முன்னிலையில் தெலுங்கானா அரசாங்கத்துடன் ஏற்படுத்தி கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி, ஜஹீராபாத்தில் தேவையான அளவு நிலத்தை அந்த அரசாங்கம் வழங்கவுள்ளது.

இந்த புதிய தொழிற்சாலையில் ட்ரைடன் இவி நிறுவனம் செமி-ட்ரக்குகளையும், செடான் & லக்சரி எஸ்யூவி கார்களையும், ரிக்ஷாக்களையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டெஸ்லாவுடன் நேரடியாக எல்லா பிரிவுகளிலும் மோத இந்த அமெரிக்க இவி நிறுவனம் விரும்புவது தெளிவாகிறது.

மேற்கூறப்பட்ட வாகனங்களை முதல் ஐந்து வருடத்தில் 50,000 யூனிட்கள் தயாரிக்கவும், இதற்காக 25,000 பணியாளர்களை வேலையில் வைக்கவும் ட்ரைடன் திட்டங்களை வகுத்து வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 2020 ஏப்ரலில் இந்த அமெரிக்க நிறுவனம் அதன் மாடல் எச் எஸ்யூவி வாகனத்தை, சுமார் 1,126கிமீ ரேஞ்ச் உடன் வெளியிட்டு இருந்தது. ரேஞ்ச் என்பது 100% -வில் இருந்து 0 சதவீத பேட்டரி சார்ஜ் வரையில் அதிகப்பட்சமாக வாகனம் இயங்கும் தூரம் ஆகும்.

ஆனால் ஒரு வாகனத்தின் ரேஞ்ச் 1,126கிமீ என்பது மிகவும் அதிகமாகும். இத்தகைய அதிகப்படியான ரேஞ்ச்சிற்கு காரணம், இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி வாகனத்தில் பெரிய 200kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் என மொத்தம் நான்கு மோட்டார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு எலக்ட்ரிக் மோட்டார்களின் மூலம் 1480 பிஎச்பி வரையிலான ஆற்றலை பெறலாம். 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடும் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி வாகனத்திற்கான முன்பதிவை 5,000 டாலர்கள் டோக்கன் தொகை உடன் அமெரிக்காவில் ஏற்கனவே ட்ரைடன் ஏற்க துவங்கிவிட்டது.

முன்பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வாரத்திற்குள் மீதி 135,000 டாலர்களை செலுத்த வேண்டும் என்கிறது தயாரிப்பு நிறுவனம். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஒரு கோடியை தாண்டி செல்கிறது. அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனாலேயே இந்த அமெரிக்க நிறுவனம் மற்ற நாடுகளில் வணிகத்தை கவனிக்க இந்தியாவில் தொழிற்சாலையை நிறுவுகிறது போல.


Click it and Unblock the Notifications








