மத்திய பட்ஜெட்: ஆட்டோமொபைல் துறைக்கான சாதகங்களும், பாதகங்களும்
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சில முக்கிய விஷயங்களால், ஆட்டோமொபைல் துறைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் சில முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கான சில முக்கிய அறிவிப்புகளும் வெளியாகி இருக்கிறது.

அதில், பழைய வாகனங்களை அழிப்பதற்கான கொள்கை முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக, விபத்து அபாயம் மற்றும் மாசு உமிழ்வு பிரச்னையை ஏற்படுத்தும் 20 ஆண்டுகள் பழமையான தனிநபர் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான வர்த்தக வாகனங்கள் தகுதிச் சோதனை முடிவுகளின்படி அழிக்கப்படும்.

மேலும், புதிய வாகனங்கள் வாங்கும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதால், விற்பனை வெகுவாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்த விரிவான விபரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து முக்கிய பாகங்களாக இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்து கார் விற்பனை செய்கின்றன.

அந்த வகையில் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில முக்கிய கார் உதிரிபாகங்கள் மீது 15 சதவீதம் வரை சுங்க வரி விதிக்கப்பட உள்ளது. இதனால், இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனையாகும் கார்களின் விலை உயர்வதற்கு வழி வகுத்துள்ளது. குறிப்பாக, பல சொகுசு கார் மாடல்கள் இந்த முறையிலேயே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதால், விலை சற்று அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரத்தில், வாகன தயாரிப்புக்கு பயன்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் உருக்கு போன்றவற்றிற்கு சுங்க வரி 7.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், உற்பத்தி செலவீனம் குறைவதற்கான வாய்ப்பை வழங்கும். இதனால், கார் விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








