சூப்பர்... மத்திய அமைச்சர் நாளை அறிமுகம் செய்யும் இந்த டிராக்டர் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்... ஏன் தெரியுமா?
இந்தியாவின் முதல் சிஎன்ஜி டிராக்டரை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நாளை அறிமுகம் செய்யவுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் முதல் முறையாக டீசலில் இருந்து சிஎன்ஜி-க்கு மாற்றப்பட்ட டிராக்டரை, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரும், மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை தொடர்ந்து ஊக்குவித்து வருபவருமான நிதின் கட்காரி பிப்ரவரி 12ம் தேதி (நாளை) முறைப்படி அறிமுகம் செய்து வைக்கிறார்.

ராவ்மட் டெக்னோ சொல்யூசன்ஸ் (Rawmatt Techno Solutions) மற்றும் டோமசெட்டோ அச்சிலே இந்தியா (Tomasetto Achille India) ஆகியவை கூட்டாக இணைந்து டீசல் டிராக்டரை, சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வகையில் மாற்றியுள்ளன. சிஎன்ஜி எரிபொருள் பயன்படுத்தப்படுவதால், இந்த டிராக்டரை இயக்குவதற்கான செலவு குறையும். எனவே விவசாயிகளின் வருமானம் உயரும்.

அத்துடன் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கும் இந்த டிராக்டர் உதவி செய்யும். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த டிராக்டரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் நிதின் கட்காரி மட்டுமின்றி, மத்திய அமைச்சர்களான தர்மேந்திர பிரதான், நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''விவசாயிகளால் எரிபொருள் செலவில் ஆண்டுக்கு 1 லட்ச ரூபாய்க்கும் மேல் சேமிக்க முடியும் என்பதுதான் மிக முக்கியமான நன்மை. இதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள முடியும்'' என கூறப்பட்டுள்ளது.

டிராக்டரை சிஎன்ஜிக்கு மாற்றுவதால் விவசாயிகளுக்கு இன்னும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். முதலில், சிஎன்ஜிக்கு மாற்றப்படும் டிராக்டர்கள், டீசல் இன்ஜினுக்கு இணையாகவோ அல்லது அதற்கும் அதிகமாகவோ சக்தியை வெளிப்படுத்தும் என்பது சோதனைகளில் தெரியவந்துள்ளது. இரண்டாவது, டீசல் இன்ஜினுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி டிராக்டர்களில் ஒட்டுமொத்த உமிழ்வு 70 சதவீதம் குறைவாக இருக்கும்.

மூன்றாவது, டீசலுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி எரிபொருளின் விலை மிகவும் குறைவு என்பதால், எரிபொருள் செலவை விவசாயிகள் நன்கு கட்டுப்படுத்தி பணத்தை சேமிக்க முடியும். சிஎன்ஜியானது மிகவும் சுத்தமான மாற்று எரிபொருட்களில் ஒன்றாக உள்ளது. எனவே பெட்ரோல், டீசலுக்கு பதிலாக சிஎன்ஜி எரிபொருளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் மத்திய அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை போல், சிஎன்ஜி வாகனங்களும் தற்போது வேகமாக பிரபலமாகி வருகின்றன. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை வேகமாக உயர்ந்து வருவதால், சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் மீது மக்களின் கவனம் திரும்பி வருகிறது. எனவே சிஎன்ஜி-யில் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்வதில் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மிகவும் ஆர்வமாக உள்ளன.

ஆனால் சிஎன்ஜி எரிபொருள் நிலையங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது ஒரு குறையாக இருக்கிறது. சிஎன்ஜி வாகனங்களுக்கு மக்கள் மாறுவதை தடுக்கும் அம்சங்களில் ஒன்றாக இதனை பார்க்கலாம். எனினும் வரும் காலங்களில் இந்த பிரச்னைக்கு அரசு சார்பில் தீர்வு காணப்படும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








