இனி வாகனங்களுக்கும் 'நாமினி' நியமிக்கலாம்... மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம்!
சொத்துக்களுக்கு வாரிசுதாரரை நியமிப்பது போன்று, வாகனங்களுக்கும் வாரிசுதாரரை நியமிக்கும் வகையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

சொத்துக்கள், காப்பீடு மற்றும் வங்கிக் கணக்கு போன்றவற்றிற்கு வாரிசுதாரரை நியமனம் செய்யும் நடைமுறை சட்டரீதியாக பின்பறப்படுகிறது. இதேபோன்று, வாகனங்களுக்கும் வாரிசுதாரரை நியமனம் செய்யும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர் மரணமடைந்தால் ஏற்படும் குளறுபடிகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக, 1989ம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டத்தில் சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, உரிமையாளர் புதிய வாகனத்தை பதிவு செய்யும்போது அல்லது பின்னர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வாரிசுதாரரை நியமிக்க முடியும்.

வாரிசுதாரரை பதிவு செய்வதற்கு உரிய அடையாளச் சான்றை சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை, வாகன உரிமையாளர் மரணமடைந்தால், பரிந்துரைக்கப்பட்ட வாரிசுதாரர் வாகனத்தின் முழு உரிமையை எளிதாக பெற முடியும். இதுவரை இதில் இருந்த பல குளறுபடிகள் தவிர்க்கப்படும்.

வாகனத்தை விற்கும்போது வேறு ஒருவருக்கு பெயர் மாற்றம் செய்து தருவதற்கும் வாரிசுதார் முழு அதிகாரம் பெற முடியும். எனினும், விவகாரத்து, பாகப்பிரிவினை செய்யும்போது, குறிப்பிட்ட நடைமுறை மூலமாக வாரிசுதாரரை மாற்றுவதற்கான வாய்ப்பும் வாகன உரிமையாளருக்கு வழங்கப்படும்.

இதுவரையில் இருக்கும் மோட்டார் வாகனச் சட்டம் 58ன் படி, வாகன உரிமையாளர் மரணமடைந்தால் 30 நாட்களுக்குள் ஆர்டிஓ அலுவலகத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். மூன்று மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட வாரிசுதாரர் பெயரில் வாகனம் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இதற்கு வாகன உரிமையாளர் இறப்புச் சான்று, வாரிசுச் சான்று, மற்ற வாரிசுகளின் ஒப்புதல் கடிதங்கள் ஆகியவற்றுடன் பிரமாணப் பத்திரத்துடன் ஆர்டிஓ அலுவலகத்தில் மூன்று மாதத்திற்குள் சமர்ப்பித்து பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். அப்படி பெயர் மாற்றம் செய்யப்படாத, வாகனத்தை சாலையில் இயக்கக்கூடாது.

ஒருவேளை வாரிசுதாரர்கள் இடையே பிணக்கு ஏற்பட்டால், வாகனத்தின் உரிமையை மாற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், நாடு முழுவதும் இறந்தவர்களின் பெயரில் உள்ள லட்சக்கணக்கான வாகனங்கள் பெயர் மாற்றம் செய்யப்படாமலேயே இயக்கப்படுகிறது.

இந்த நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காணும் விதத்தில், வாகனங்களுக்கு வாரிசுதாரரை நியமிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நடைமுறை மூலமாக, வாகன உரிமையாளர் மரணமடையும்பட்சத்தில் ஏற்படும் உரிமை கோரல் பிரச்னைகளுக்கு இது தீர்வாக அமையும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








