ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி மீண்டும் வருகிறது... ஆனால் விலை கணிசமாக உயர்வு!
ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இந்த எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதேநேரத்தில், விலை கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி இந்தியாவில் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றது. டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் அதிக மதிப்பு வாய்ந்த மாடலாக வாடிக்கையாளர்கள் மதிப்பிடப்பட்டதால், அதிக வரவேற்பை பெற்றது.

இறக்குமதி கார் என்ற அந்தஸ்தும் இந்த காரின் மதிப்பை உயர்த்தியதில் மிக முக்கிய காரணமாக அமைந்தது. ரூ.19.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில், அனைத்து வசதிகளும் கொண்ட டாப் வேரியண்ட்ட்டில் மட்டும் விற்பனைக்கு வந்தது.

2020ம் ஆண்டுக்காக முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து கார்களும் விற்பனையானது. இதையடுத்து, புக்கிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றமடைந்தனர்.

இந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஸிக்வீல்ஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள ஃபோக்ஸ்வேகன் ஆசிஷ் குப்தா இந்த எஸ்யூவி விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதை உறுதி செய்துள்ளார்.

மேலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதையடுத்து, இந்தியாவிலேயே இந்த எஸ்யூவியை அசெம்பிள் செய்து விற்பனை செய்வது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலமாக, விலையை இன்னும் சவாலாக நிர்ணயிக்கும் வாய்ப்பை பெற முடியும்.

இந்த சூழலில், 2021ம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ள ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவிகளுக்கு கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட உள்ளது. ரூ.21.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஆசிஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

அதாவது, கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மாடலைவிட ரூ.1.36 லட்சம் கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில டீலர்களில் முன்பதிவும் செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே, இந்த காரை வாங்க காத்திருந்தால், உடனடியாக அருகிலுள்ள ஃபோக்ஸ்வேகன் டீலரை தொடர்பு கொண்டு விபரம் தெரிந்து கொள்வது நல்லது.

ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ எவோ எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

பனோரமிக் சன்ரூஃப், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 6 ஸ்பீக்கர்களுடன் சவுண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன.

ஏராளமான பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றுள்ளது. லேன் கீப் அசிஸ்ட், முன்புற மோதல் குறித்த எச்சரிக்கை, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், முன்புற மற்றும் பின்புறத்தில் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. ஸ்கோடா கரோக், ஜீப் காம்பஸ் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








