மஹிந்திரா தயாரிப்புக்கு இதை விட வேறென்ன சான்றிதழ் வேண்டும்? படிக்கட்டில் அசால்ட்டாக இறங்கிய தார்
கடந்த ஆண்டில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் அறிமுகப்படுத்தப்பட்ட வாகனம் தான் புதிய தலைமுறை மஹிந்திரா தார். இந்த மஹிந்திரா தயாரிப்பிற்கு கிடைத்துவரும் வரவேற்பிற்கு, அதனை முன்பதிவு செய்து நீண்ட மாதக்கணக்கில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தான் சாட்சி.

இதனால் தான் தாரின் லைன்-அப்பை விரிவுப்படுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மஹிந்திரா தார் மிக சிறந்த ஆஃப்-ரோடு வாகனம் என்பது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

தாரில் சிலர் ஆற்றை கடந்துள்ளனர். சிலர் தாரை முற்றிலும் மணல் மட்டுமே நிறைந்த கடற்கரை பகுதிகளுக்கு எடுத்து சென்றுள்ளதை நமது செய்திதளத்தில் கூட பார்த்துள்ளோம். ஆனால் இங்கு சிலர் தங்களது மஹிந்திரா தார் வாகனத்தில் போதுமான அகலம் கொண்ட படிக்கட்டில் இறங்கியுள்ளனர்.
Image Courtesy: Tushar Babbar
டுஷார் பாப்பர் என்ற யுடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இதுதொடர்பான வீடியோவினை தான் மேலே பார்க்கிறீர்கள். இது எந்த இடம் என்பது சரியாக தெரியவில்லை. அதேபோல் இது தார் 4x4 லோ (Low) வாகனமா அல்லது 4x4 ஹை வாகனமா என்பதும் தெரியவில்லை.

படிக்கட்டில் இருந்து எந்தவொரு விபத்தும் இல்லாமல் இறங்க வாகனத்திற்கு ஒருவர் அருகிலேயே நடந்து வந்தவாறு வழிக்காட்டியுள்ளார். கற்களினாலான இந்த படிக்கட்டு நேராக இல்லாமல் சற்று வளைந்தாற்போல் உள்ளது. இதனால் வாகனம் விபத்தில் சிக்குவதற்கோ அல்லது சேதம் அடைவதற்கோ வாய்ப்புள்ளது.

ஆனால் அவ்வாறான சம்பவம் எதுவும் இந்த வீடியோவில் நிகழவில்லை. இதில் இருந்து மஹிந்திரா தார் வாகனத்தின் ஆஃப்-ரோடு திறனை பற்றி நீங்களே அறியலாம். ஒரு எஸ்யூவி வாகனத்தில் இவ்வாறான சாகசங்களை செய்யலாமா என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம்.

மஹிந்திரா தார் போன்று ஆஃப்-ரோடுகளுக்கு ஏற்ற வாகனமாக இருந்தால் நிச்சயம் அந்த எஸ்யூவி வாகனத்தில் இவ்வாறான சாகசங்களை மேற்கொள்ளலாம். அதேநேரம் தங்களது வாகனத்தின் தோற்றத்தையும் பார்க்க வேண்டும். ஏனெனில் இதை சொல்கிறேன் என்றால், புதிய தார் வாகனங்களை பயன்படுத்தும் உரிமையாளர்கள் ரேடியேட்டர் மிகவும் தாழ்வாக வழங்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

பாதசாரிகளை கண்டறிவதற்காக இவ்வாறு மஹிந்திரா பொருத்தியுள்ளதினால், ஆஃப்-ரோடு பயணங்களுக்கு செல்லும்போது ரேடியேட்டர் சேதமடைவதாக அவர்கள் தெரிவித்து வந்தனர். ஒருவேளை ரேடியேட்டர் பழுதானால் அதனை சரி செய்ய செலவு அதிகமாகும்.

இந்த பிரச்சனை மஹிந்திரா நிறுவனத்திற்கு தெரியவந்ததை அடுத்து, தற்போது அந்த பகுதியில் புதிய டிசைனில் ஸ்கிட் தட்டை வழங்கி வருகிறது. மேலும் இரு புதிய ஆக்ஸஸரீகளையும் ஆஃப்-ரோடு பயணங்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஒன்றான ரேடியேட்டர் பாதுகாப்பானின் விலை ரூ.5,550 ஆகவும், எரிபொருள் டேங்க் பாதுகாப்பானின் விலை ரூ.2,335 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய தாரில் சுதந்திரமாக செயல்படும் வகையில் வில் வடிவிலான சஸ்பென்ஷனையும் மஹிந்திரா கொண்டு வந்துள்ளது. இவ்வாறான அம்சங்கள் இருந்தாலும், இப்படி படிக்கட்டில் வாகனத்தை அடிக்கடி ஏற்றி இறங்கினால் சஸ்பென்ஷனின் ஆயுட்காலம் குறையும்.


Click it and Unblock the Notifications








