"பழைய வாகனத்தை எடைக்கு போட்டால் தள்ளுபடி கிடைக்கும்"... மத்திய அமைச்சர் தகவல்... எத்தன சதவீதம் தெரியுமா?
பழைய வாகனங்களை புதிய ஸ்கிராப் பாலிசி திட்டத்தின் வாயிலாக அழிப்போர்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருக்கின்றார். எத்தனை சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட இருக்கின்றது. என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

2021-22ம் ஆண்டிற்கான பட்ஜெட்டின்போது வார்த்தக மற்றும் பழைய வாகன உரிமையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் வாகன அழிப்பு கொள்கை பற்றிய தகவலை மத்திய அரசு வெளியிட்டது. ஏற்கனவே இதுகுறித்த தகவலை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அவ்வப்போது அறிவித்து வந்தநிலையில், இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிக்கையின்போது உறுதிப்படுத்தினார்.

20 வருடங்கள் பழைய தனிநபர் மற்றும் 15 ஆண்டுகள் பழைய வர்த்தக வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றுவதே இந்த புதிய வாகன அழிப்பு கொள்கை திட்டத்தின் சாரம்சமாகும். இதனை தன்னார்வம் என்று அரசு கூறினாலும், குறிப்பிட்ட ஆண்டுகளைக் கடந்து பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் கட்டாயம் தரசான்று (FC) பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்காக தனியார் தனியங்கி பரிசோதனை மையங்கள் நிறுவப்பட இருப்பதாகவும் அரசு கூறியிருக்கின்றது. இங்கே, வாகனங்கள் தானியங்கி முறையில் பரிசோதனைச் செய்யப்படும். இங்கு வாகனங்கள் தேர்ச்சி பெற தவறினால், அந்த வாகனத்தை பறிமுதல் செய்வதோடு இல்லாமல் மிகப்பெரிய அபராதத் தொகையை அதன் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருக்கின்றார்.

ஆகையால், புதிய வாகன அழிப்பு கொள்கை திட்டம் தன்னார்வம் என்று கூறப்பட்டாலும் மத்திய அரசு போட்டிருக்கும் கிடுக்குப்பிடியால் வாகன உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். குறிப்பாக, பழைய வின்டேஜ் மற்றும் பழைய வர்த்தக வாகனங்களைப் பயன்படுத்துவோர் மத்தியில் இத்தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த நிலையில், லேசான ஆறுதல் அளிக்கும் வகையில் பழைய வாகனங்களை தாமாக முன் வந்து அழிப்போருக்கு சிறப்பு சலைகையை வழங்க இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருக்கின்றார். இதுகுறித்து அவர் கூறியதாவது, புதிய வாகன அழிப்பு கொள்கைத் திட்டத்தின்கீழ் பழைய வாகனங்களை அழிக்க தாமாக முன்வரும் நபர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்திருக்கின்றார்.

இதனை வாகன உற்பத்தி நிறுவனங்களே புதிய வாகனங்களை வாங்கும் போது வழங்கும் என அவர் கூறினார். இது பழைய வாகனத்தை ஸ்கிராப் செய்துவிட்டு புதிய வாகனத்தை வாங்குவோர்க்கு பேருதவியாக அமையும் எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து, மிக முக்கியமாக பழைய வாகனங்களை அழிக்கும் திட்டத்தால், தற்போது நலிவடைந்து காணப்படும் இந்திய வாகனத்துறையை விரைவில் இரட்டிப்பான லாபத்தைச் சந்திக்கவும் இது உதவும் என அவர் கூறினார்.

மேலும், வாகனங்கள் சார்ந்து இயங்கும் பெரு நிறுவனங்கள் மட்டுமின்றி சிறு நிறுவனங்களும் இதன்மூலம் வலிமடையும் கூறப்பட்டுள்ளது. தற்போது இருப்பதைக் காட்டிலும் 30 சதவீதம் வரை இந்திய வாகனத்துறை வளர்ச்சியடையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றார். தற்போது, ஆண்டு ஒன்றிற்கு ரூ. 4.5 லட்சம் கோடி வரை வாகனத்துறை மூலம் நாடு வருவயாக ஈட்டி வருகின்றது.

அதுவே பழைய வாகனங்கள் அழிப்பு கொள்கை திட்டம் நடைமுறைக்கு வருமேயானால் இது ரூ. 10 லட்சம் கோடியாக உயரும். இதன்மூலம் இந்தியா செழிப்பான நாடாக மாறும். தொடர்ந்து, வேலை வாய்ப்பு மற்றும் தற்போது விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் 30-40 சதவீதம் வரை குறைந்த விலையில் வாகனங்கள் என பல்வேறு நலன்கள் மக்களை வந்து சேரும் அமைச்சர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








