யாரும் எதிர்பாக்காத ட்விஸ்ட்! பிரபலமான டொயோட்டா காரின் விற்பனை திடீர் நிறுத்தம்! ஷாக் ஆன இந்திய மக்கள்!
மிகவும் பிரபலமாக இருந்து வந்த டொயோட்டா நிறுவன காரின் விற்பனை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை எல்லாம் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை டொயோட்டா நிறுவனம் தற்போது தனது பிராண்டிலும் விற்பனை செய்து வருகிறது. சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களுக்கு இடையே உருவாகியுள்ள கூட்டணிதான் இதற்கு காரணம்.

இந்த கூட்டணியின் மூலம் டொயோட்டா பயன்படுத்தி கொண்ட மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் கார் பலேனோ (Maruti Suzuki Baleno). டொயோட்டா நிறுவனம் இந்த காரை க்ளான்சா (Toyota Glanza) என்ற பெயரில் தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வந்தது. கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம்தான் டொயோட்டா க்ளான்சா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து மாருதி சுஸுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா (Maruti Suzuki Vitara Brezza) காரை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் அர்பன் க்ரூஸர் (Toyota Urban Cruiser) என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே மாருதி சுஸுகி நிறுவனம் பலேனோ காரை அப்டேட் செய்தது. பல விதங்களிலும் மேம்படுத்தப்பட்ட 2022 மாருதி சுஸுகி பலேனோ கார் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே டொயோட்டா நிறுவனமும் நடப்பாண்டு மார்ச் மாதம் 2022 க்ளான்சா காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டது.
ஆனால் டொயோட்டா அர்பன் க்ரூஸர் விஷயத்தில் அது நடக்கவில்லை. மாருதி சுஸுகி நிறுவனம் 2022 பிரெஸ்ஸா காரை கடந்த ஜூன் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால் தற்போது வரை 2022 டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விற்பனைக்கு வரவில்லை. 2022 டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகி விடும் என்றே பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.
இதில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்கு ஏமாற்றமான தகவல் வெளியாகியுள்ளது. டொயோட்டா இந்தியா நிறுவனம் அர்பன் க்ரூஸர் காரை தற்போது தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. எனவே இந்தியாவில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் விற்பனை ஓரளவிற்கு சிறப்பாகதான் இருந்து வந்தது. டொயோட்டா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் அர்பன் க்ரூஸர் கார்களை விற்பனை செய்து கொண்டிருந்தது. ஆனால் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வெறும் 330 அர்பன் க்ரூஸர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
அதை தொடர்ந்து வந்த அக்டோபர் மாதத்தில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரின் விற்பனை பூஜ்ஜியமாக குறைந்து விட்டது. அதாவது ஒரு கார் கூட விற்பனை செய்யப்படவில்லை. எனவே இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் காரின் விற்பனையை நிறுத்தியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இந்த விற்பனை நிறுத்தம் தற்காலிகமானதாக இருக்கலாம்.
அதாவது டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) என்ற காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்பது வேறு. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் என்பது வேறு. முதலாவது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இரண்டாவது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது.
ஆனால் இந்த 2 கார்களின் பெயர்களும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரே பெயரில் 2 கார்களை விற்பனை செய்வது நல்ல திட்டமாக இருக்காது. எனவே டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் காரின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தியிருக்கலாம். அதற்கு பதிலாக வேறு ஒரு பெயரில் இந்த காரை டொயோட்டா நிறுவனம் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் டைசூர் (Toyota Taisor) என்ற பெயரை டொயோட்டா நிறுவனம் தற்போது பதிவு செய்து வைத்துள்ளது. 2022 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் அடிப்படையில் விற்பனைக்கு வரவுள்ள டொயோட்டா நிறுவனத்தின் காருக்கு இந்த பெயர் சூட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








